‘ஜெய்பீம்’ வெளிவந்ததிலிருந்து ஏற்படுத்திய அதிர்வலை இன்றும் ஓயவில்லை. ஒருவர் சொந்த சாதிக்கு துரோகம் செய்யும்போதுதான் சாதி ஒழிப்பு போராட்டம் வலுப்பெறும். சாதி ஒழிப்பு என்பது ஒடுக்கப்பட்ட சாதியினர் தனித்து நின்று போராடுவதல்ல, ஒடுக்கும் சாதியை சேர்ந்தவர்களும் இணைந்து போராடும்போதுதான் அது சாத்தியமாகும். பொதுச்சமூகத்தின் மனசாட்சி யாருக்காகத் துடிக்க வேண்டும் என்ற கேள்வியை ‘ஜெய்பீம்’ எழுப்பியுள்ளது. நாகரீக சமூகமாக மேலெழுந்து செல்ல காவல்துறைதான் தடையாக உள்ளது என்று காவல்துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையங்கள் கூறுகின்றன. சித்ரவதைக்கு எதிரான 2 உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதற்கான விதிகளை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் இயக்கம்தான் சமூக களத்தை தீர்மானிக்க வேண்டும். அதற்கு கலையும் இலக்கியமும் உறுதுணையாக வரும் என்றார்.
சிவப்பதிகாரம்
நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், காவல்துறையின் அதிகாரச் சிவப்பை விட, கம்யூனிஸ்ட்டுகளின் வர்க்கச் சிவப்பு வலிமையானது என்று களப் போராளிகளும், கலைப் போராளிகளும் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர். ஜெய்பீமும், லால்சலாமும் ஒன்றாக உட்கார்ந்துள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட வாழ்வை, வாதையை சொல்லிய ஜெய்பீம், மாநில முதலமைச்சரை குடிசையை நோக்கி நடக்க வைத்துள்ளது. கண்ணகிக்கு நீதி கேட்க கால் சிலம்பு இருந்தது; பார்வதிக்கு செங்கொடிதான் இருந்தது. அது சிலப்பதிகாரம் என்றால், இது சிவப்பதிகாரம் என்றார்.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு வணக்கம்
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கலை இயக்குநர் கே.கதிர் குறிப்பிடுகையில், “வாக்குகளை மட்டுமே நம்பி கட்சி நடத்தும்போது, வாக்குரிமையே இல்லாத அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, சாதிய, சமூக, அரசு அதிகாரத்திற்கு எதிராக இறுதிவரை போராடி வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு வணக்கம். எனது 65வது படத்தில்தான் கம்யூனிஸ்ட்டுகளிடம் பாராட்டை பெறுகிறேன். வெகுஜன மக்கள் விழிப்படைந்து கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக படத்தை எதிர்க்கிறார்கள். நாட்டில் மதம் என்ற பெயரில் துவேசத்தை உருவாக்குகிறார்கள். கம்யூனிஸ்ட் இயக்கம் பிற அமைப்புகளை ஒருங்கிணைத்து நல்ல இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
விருதுகளை தடுக்கும் பாஜக
இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், “சர்தார் உத்தம்சிங், ஜெய்பீம் என அடுத்தடுத்து படங்கள் வந்து சமூகத்தை அதிரச் செய்துள்ளன. உத்தம்சிங் படம் சர்வதேச விருகளை பெற விடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுத்து வருகிறது. இதனையும் மீறி ‘ஜெய்பீம்’ சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது. பழங்குடிகளின் வாழ்வை ‘ஜெய்பீம்’ வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.
ஓராயிரம் கோவிந்தன்கள்
“கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு போராட்டத்தை படமாக்கியதற்கே பல தளங்கள் அதிர்கின்றன. ஒவ்வொரு போராட்டத்தையும் படமாக்கினால் சமூகமே கொந்தளிக்கும். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணம் கோவிந்தன். அவரை போன்று ஓராயிரம் கோவிந்தன்கள் கட்சியில் உள்ளனர் என்பதை பெருமையோடு கூறுகிறோம்” என்று கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தமது வரவேற்புரையில் கூறினார்.