கோத்தகிரி, நவ.25- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் சில நாட்களாக பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் சனிக்கிழமை இரவு முதல் நீர்பனிப்பொழிவு தொடங்கியது. இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நகர்ப்புற பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கடும் குளிர் நிலவுவதோடு மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் உதகை, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர். காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் பணிக்குச் செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் குளிரால் சிரமமடைய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.