tamilnadu

img

உத்தரப்பிரதேசத் தேர்தல் பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் கட்சிக்கு இடமில்லை

உத்தரப்பிரதேசம், ஜன.16- உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாரை நட்டாற்றில் விட்டுவிட்டது பாஜக. இதையடுத்து நிதிஷ்குமார் ஜேடி(யு) தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். முதல் வேட்பாளர் பட்டியல் ஜனவரி 18-ஆம் தேதி வெளியாகிறது. ஆளும் கூட்டணிக் கட்சியான பாஜகவால் புறக்கணிக்கப்பட்ட ஜேடி(யு)  (நிதிஷ்குமார் கட்சி) உத்தரப்  பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தங்களுக்கு 51 இடங்களை ஒதுக்கவேண்டுமென ஜேடி(யு) பாஜக-வை வற்புறுத்தியது. ஆனால், சமீபத்தில் உத்தரபிரதேச தேர்தலுக்கான பாஜக  வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் ஒன்றிய அமைச்சர் அனுப்ரியா படேல்  தலைமையிலான அப்னா தளம் மற்றும் சஞ்சய் நிஷாத் தலைமையிலான-நிஷாத். (நிர்பல் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம்) கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்துள்ளதாக பாஜக கூறிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் ஜேடி(யு)யை தம்மோடு சேர்க்க மறுத்துவிட்ட பாஜக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியில் கூட்டணியாக உள்ளது. ஒன்றியத்தில் பாஜகவின் கூட்டணியில் ஜே.டி.(யு) உள்ளது.  பீகாரில் நிதிஷ்குமார் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த, கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய எஃகுத் துறை அமைச்சருமான ஆர்சிபி சிங்குக்கு, ஜேடி(யு) அங்கீ காரம் அளித்துள்ளது. “ஆனால், இந்த  விவகாரத்தில் சிங்குடன் பாஜக எந்த சந்திப்பையும் நடத்தவில்லை,” என்று ஒரு ஜேடி(யு)-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்,  உத்தரப்பிரதேசத்தில் ஜேடி(யு) போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஜனவரி 18-ஆம் தேதி (நாளை) வெளியாகுமென முதன்மை பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேச கட்சி பொறுப்பாளருமான கே.சி. தியாகி கூறியுள்ளார்.