tamilnadu

img

தேசிய மூத்தோர் தடகளம் தமிழ்நாடு சாம்பியன்

கடலூரில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தேசிய அளவிலான 41ஆவது மூத்தோர் தடகளப் போட்டிகள் தமிழ்நாட்டில் முதன் முறையாக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றன. தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்களிலிருந்து 1,300 வீரர்கள் பங்கேற்றனர். 30 வயது முதல் 90 வயது வரைக்கும் பல்வேறு பிரிவுகளில் ஆண்-பெண் என்று தனித்தனியாக 145 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் தனிநபர்கள், குழுவினர் பெற்ற வெற்றியின் அடிப்படையில் முதல் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகம் ஒட்டுமொத்தமாக முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2ஆவது இடத்தை மகாராஷ்டிரா அணியும், 3ஆவது இடத்தை ஆந்திரா அணியும் கைப்பற்றின. அணி வகுப்பில் அசத்திய ஆந்திராவுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள், தனி நபர்களுக்கு அந்தந்த மாநில மூத்தோர் தடகள கழக நிர்வாகிகளிடம் பரிசுகள் ஒப்படைக்கப்பட்டன. 

சாதனை சந்திரன்

தமிழக அணி சார்பில் பங்கேற்ற கடலூரைச் சேர்ந்த சந்திரன் 400, 800, 1500, 5 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், தேசிய மூத்தோர் தடகள தலைவர் பி.அமரேந்தர் ரெட்டி, செயல் தலைவர் டி.எச்.குரு, மூத்த துணைத் தலைவர் தரம்பால்சர்மா, மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.சிவா, தமிழ்நாடு மூத்தோர் தடகள மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்செல்வன், துணைச் செயலாளர் என்.பாலசுந்தரம், துணைத் தலைவர் க.திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூன்று மாதகாலம் கடுமையாக உழைத்து விளையாட்டுப்போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த விழா குழுவினருக்கும் ஒட்டுமொத்த வீரர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் தங்கும் வசதிகளை மிக சிறப்பாக  செய்து கொடுத்த அனைவருக்கும் கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், துணைத் தலைவர் டி.புருஷோத்தமன், நிர்வாகி தேவநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும், அரைநூற்றாண்டுகளை கடந்துள்ள கடலூர் விளையாட்டு மைதானத்தில் செயற்கை தரை (சிந்தடிக்) அமைத்து நவீன வசதிகளுடன் மேம்படுத்தி கொடுக்கவேண்டும் என்று அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.