சுகாதாரத் துறை அமைச்சர் கருத்துக்கு எம்ஆர்பி செவிலியர் சங்கம் மறுப்பு
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் குறித்து ஏப்.21 அன்று சட்டமன்றத்தில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளார் என்று தமிழ் நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செய லாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: 2020 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு, கொரோனா பிரிவில் பணி செய்த அனைவரை யும் 31.12.2022 அன்று அரசு பணி நீக்கம் செய்தது. செவிலியர்கள் பல கட்ட போராட்டம் நடத்தினர். 2023 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்த ரவுக்கு பிறகு 2,600 பேருக்கு 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய பணி வழங்கப்பட்டது. 620 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று, 60 ஆயிரம் ஊதியம் பெறுவதாக அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டித் தேர்வின் மூலம் 2015 ஆம் ஆண்டு 7,700 ரூபாய் ஊதியத்தில் தொகுப்பூதிய முறையில் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2 வருடத்திற்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 8 ஆண்டுகளை கடந்தும் சுமார் 8000 செவிலி யர்கள் பணி நிரந்தரம் பெறாமல் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்று வருகின்றனர். தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறி யுள்ளது. 4 வருடம் கடந்தும் அதனை நிறை வேற்றாமல் உள்ளது. மருத்துவத் துறையில் 60 சதவீதத்திற்கும் மேல் நிரந்தர தன்மையற்ற ஒப்பந்த, தொகுப்பூதிய, வெளி முகமை முறை யில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள், புள்ளி விவரங்களை அமைச்சர் பொதுவெளியில் பேசி வருவதை தவிர்க்க வேண்டும். துறையின் மீதும், ஊழியர்களின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து முதல மைச்சர் இந்த கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.