tamilnadu

img

மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் சென்று தலித் மக்கள் வழிபட ஏற்பாடு: கோட்டாட்சியர் உறுதி

விழுப்புரம், ஏப்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தால், மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட தலித் மக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.  கடந்த 7ஆம் தேதி விழுப்புரம் வட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி  ஊராட்சியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சாமி கும்பிடச் சென்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கதிரவன் தாக்கப்பட்டார். அதனை தடுக்க வந்த அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி சாதி ஆதிக்க சக்தியினர் தாக்கினர். இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவிலுக்குள் சென்று தலித் மக்கள் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (ஏப். 12) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதன்கிழமை காலை 300க்கும் மேற்பட்ட கட்சியினர் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சாமி கும்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த பகுதி மக்களை சந்தித்து கோட்டாட்சியரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்தும், அவர் அளித்த உறுதிமொழி குறித்தும் எடுத்துக் கூறினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, ஏ.சங்கரன், எஸ்.முத்துக்குமரன், ஆர்.டி.முருகன், வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.