கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க
எம்எல்ஏ, உயர்கல்வி அமைச்சர் கோரிக்கை
கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் போராட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற சாக்கோட்டை க. அன்பழகன், இதுகுறித்து, சட்டமன்ற கூட்டத் தொடரில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், தற்போதைய தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தேர்தல் வாக்குறுதியில் கழக ஆடசி அமைந்தால் கும்பகோணத்தை தலைநகரமாகக் கொண்டு கும்பகோணம் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய தமிழக முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிர்வாக சம்பந்தப்பட்ட ஆய்வில் இருப்பதால் கும்பகோணம் மாவட்டம் அறிவிப்பு இடம்பெறாமல் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், திமுக அளித்த உறுதியினை நினைவுபடுத்தி, இந்தக் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டி, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர், தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்து கேட்டுக்கொண்டனர். இதனால், தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாகும் அறிவிப்பு வெளியாகும் என பொதுமக்கள் இடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.