சுகாதார சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜூன் 17- அரசுப்பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலும் பாதிப்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை கோரிக்கைகள் வைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடல்நிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுப்பாளையம் முதல் காட்டூர் வரை சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, சிபிஎம் கிளைச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.