tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மார்க்ஸ் பிறந்த தின சிறப்பு ரத்த தான முகாம்

திருவாரூர், மே 13-  மாமேதை காரல் மார்க்ஸ்சின் 207 ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருவாரூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. கன்வீனர் பாலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர். மரு. ராஜேந்திரன் துவக்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் கே.வேலவன் முன்னிலை வகித்தார். மருத்துவமனை நிலை அதிகாரி மரு.எஸ். ராமச்சந்திரன், ரத்தவங்கி மருத்துவர் ஆர். ரவிவர்மன், தலைமைச் செவிலியர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட துணை நிர்வாகிகள் இளையராஜா, ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், சுரேந்தர், மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த், மாவட்டத் தலைவர் சுகதேவ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

பேரனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி  முதியவரிடம் பண மோசடி:  தந்தை, மகன் கைது

தஞ்சாவூர், மே 13-   தஞ்சாவூர் அருகே, பேரனுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி, முதியவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணத்தை வாங்கி மோசடி செய்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்(72). இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு இவருடன் செக்யூரிட்டியாக வேலை பார்த்த நார்த்தேவன் குடிகாடு பகுதியை சேர்ந்த தனிக்கொடி (52) என்பவர், கோவிந்தராஜனிடம், தனக்கு அரசியல்வாதிகளிடம் நன்கு பழக்கம் உள்ளது. அதனால் உங்கள் பேரனுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி ரூ. 60 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால், ஒரு வருடமாக வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் தனிக்கொடி இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து கோவிந்தராஜன் மீண்டும் தனிக்கொடியிடம் வேலை வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை. எனது பணத்தைக் கொடுத்து விடு எனக் கேட்டுள்ளார். அப்போது தனிக்கொடியும், அவரது மகன் நவீன் கண்ணன் (27) இருவரும் சேர்ந்து கோவிந்தராஜனை பணம் தர முடியாது எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜன் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பணத்தை மோசடி செய்த தனிக்கொடி மற்றும் அவரது மகன் நவீன் கண்ணன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனியார் அறக்கட்டளை  கல்வி உதவித்தொகை  வழங்கல்

தஞ்சாவூர், மே 13-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் அதம்பை தெற்கு, நேதாஜி நகரில், காரைக்குடி எஸ்.கே. கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், அதன் நிர்வாகி 18 பட்டி வி.எஸ். கருப்பையா, மாணாக்கர்கள் மனோஜ், மோனிஷா ஆகிய இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரத்தை கல்வி உதவித்தொகையாக வழங்கினார். நிகழ்வில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வி.தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் கே.பெஞ்சமின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் நன்றி தெரிவித்து பேசினர். தமுஎகச நிர்வாகி சி.ஆசைத்தம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார். கிராமப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டுப் பட்டாவில்  பெயர் சேர்க்க  2 ஆயிரம் லஞ்சம்:  விஏஓ கைது

 குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி (34) விவசாயி. இவர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தின் கூட்டுப் பட்டாவில் தனது தாயார் பெயரைச் சேர்க்கக் கோரி ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த பெரியம்மாபாளையம் விஏஓவாக பணிபுரியும் அன்பழகன்(50) கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத கலைமணி, பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் குன்னம் விஏஓ அலுவலகத்தில் இருந்த பெரியம்மாபாளையம் அன்பழகனிடம் ரூ.2 ஆயிரம் பணத்தை கலைமணி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான காவல்துறையினர், விஏஓ அன்பழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேதுபாவாசத்திரம்  புதிய பாரத எழுத்தறிவு  திட்டப் பயிற்சி

தஞ்சாவூர், மே 13-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.  பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவும், எண்ணறிவும் கற்பிக்கப்படுகிறது.  2024-25 ஆம் ஆண்டில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, 39 பள்ளிகளில் 1,105 கற்போர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு வகுப்பு எடுக்க 39 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி, சேதுபாவாசத்திரம் வட்டார வள மையம் (இருப்பு) குருவிக்கரம்பையில் நடைபெற்றது.  பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் துவக்கி வைத்து, பயிற்சியின் நோக்கம் குறித்து கூறினார். பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் எம்.கே.ராமமூர்த்தி, எஸ்.சிவசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.  பயிற்சியின் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுனர் அ.ரா.சரவணன் செயல்பட்டார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.