தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை தியாகிகள் வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், என்.வெங்கடாசலம் வரலாறு ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல் நிகழ்வாக, தியாகிகள் வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், என்.வெங்கடாசலம் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவணப்படத்தினை வெளியிட, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு பெற்றுக் கொண்டார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் வாழ்த்திப் பேசினர். ஆவணப்படம் தயாரித்த தமிழ் மார்க்ஸ் ஆவணப்படக்குழு தோழர்கள் சு.பாலமுருகன், ஜீவமணிகண்டன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் நன்றி கூறினார்.