மணப்பாறை சிப்காட் விவகாரம்: நாளை சமரச தீர்வு மையம் நில உரிமையாளர்களுக்கு சார்பு நீதிபதி அழைப்பு
திருச்சிராப்பள்ளி, செப். 18- திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில், செப்.20 ஆம் தேதி (சனிக்கிழமை) நில கையகப்படுத்த வழக்கு தொடர்பாக நில உரிமையாளர்களுக்கான சமரச தீர்வு மையம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட சமரச மையத்தின் சார்பு நீதிபதி பிரபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கே.பெரியப்பட்டி, சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி மற்றும் கிராமத்திலுள்ள நிலங்கள் அரசால் 2013 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் நில உடைமையாளர்கள் யார் என்பது குறித்த நிலங்கள், தரப்பினர்களுக்குள் பிரச்சனை உள்ள நிலங்கள், போதிய இழப்பீடு வழங்கவில்லை போன்ற நிலங்களுக்குரிய வழக்குகள் திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இழப்பீடு தொகையானது அரசால் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்ட பல நபர்களுக்கு, உரிய முகவரி இல்லாததாலும், தற்போது சிலர் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பதாலும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை குறித்த அறிவிப்பு சார்வு செய்ய இயலவில்லை. அறிவிப்பு சார்வு செய்ய முடியாத காரணத்தால் வழக்கை மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல், இழப்பீட்டு தொகைகள் நீதிமன்ற வைப்பீட்டில் உள்ளது. எனவே பொது அறிவிப்பு கொடுத்து அனைவரையும் அழைத்து, வழக்கு தரப்பினர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது பற்றி தெரிவித்தும், சமரசமாக முடித்து கொள்ளக் கூடிய வழக்குகளை விசாரிக்கவும், சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை வரும் சனிக்கிழமை நடத்தவுள்ளோம். மணப்பாறை சிப்காட் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை 12 மணி அளவில் இந்த தீர்வு மையம் நடைபெறும். எனவே, சிப்காட் தொழில் பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்களுடைய வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளவும், சட்ட உதவி பெற்று சமரசமாகவும் முடித்துக் கொள்ளலாம்’’ என நில உரிமையாளர்களுக்கு மாவட்ட சார்பு நீதிபதி பிரபு அழைப்பு விடுத்துள்ளார்.