69 சதவிகித இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உறுதியளித்து உள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி வரவேற்றுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோ டெக்னாலாஜி படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் இதுவரை 69% இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஆனால் ம.கா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிப்பிற்கான விண்ணப்பத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேலிக்கூத்தானது. இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து, தற்போது மதுரை காமராசர் பலகலைக்கழகம் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையான 69 சதவிகித இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் என இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு சு.வெங்கடேசன் எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.