tamilnadu

img

எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு இழப்பீடு கோரிய விவசாயிகள் கைது

மதுரை. மார்ச் 15 - எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு சமமான இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகளை அழைத்துப் பேசுகிறோம் எனக் கூறிவிட்டு மதுரை மாவட்ட நிர்வாகம் அவர்களை கைது செய்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கான சமமான இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மதுரையை அடுத்துள்ள மாயாண்டிபட்டியில் மார்ச் 7-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இரு போக சாகுபடி விளை நிலத்தில் ஒரு பகுதியில் உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.94 லட்சம் இழப்பீடும் ஒரு வரப்புக்கு அடுத்த வயலில் உள்ள விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு  ரூ. 9 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது.  அதாவது ஒரு செண்ட் நிலத்திற்கு ஒரு வரப்பிற்கு அந்தப்புறத்தில் ரூ.45 ஆயிரம் ரூபாயும், இந்தப்புறத்தில் வெறும் நான்காயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

அனைத்து விவசாயிகளுக்கும் சமமான இழப்பீடு வழங்கவேண்டும். அத்துடன் பட்டியலின மக்கள் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு அவர்களுக்குரிய இழப்பீட்டை நேரடியாக வழங்க வலியுறுத்தி மாயாண்டிபட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலூர் ஆர்டிஒ பிர்தௌஸ் பாத்திமா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆர்டிஒ, மாவட்ட ஆட்சியர் முதல்வர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். அவர் வந்தவுடன் உரிய தீர்வு காணப்படும். ஆட்சியருடன் பேசுவதற்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்படுவர். அதுவரை குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்படும் என உறுதியளித்தார்.  பட்டிலியன மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நானும் பரிந்துரைக்கிறேன் என்றார்.  

இந்த நிலையில் ஆர்டிஒ அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர்.  இந்நிலையில் காவல்துறையைக் கொண்டு குழாய் பதிக்கும் பணியை நடத்திடும் முடிவில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை வாகனங்களுடன் வந்து குவிந்தனர். பேச்சுவார்த்தைக்கு தயாரான நிலையில் இருந்த விவசாயிகள் ப.முருகன், முருகேசன், கிருஷ்ணன், பெருமாள், ஆர்.பாண்டியம்மாள், நல்லம்மாள், உமாவதி, ரமாதேவி ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு செல்லலாம் எனக் கூறி, பின்னர் கைது செய்த காவல்துறையினர் யா. ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மற்றொருபுறத்தில் காவல்துறை பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் செவ்வாயன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நடத்தி முடித்துள்ளார். அப்போது அவர் மக்கள் சொல்லும் கோரிக்கைகள் மீது ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் இழப்பீடு கேட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் எனக் கூறிவிட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் கோரிக்கைகளை “இப்படித்தான்” தீர்க்க வேண்டுமென ஏதேனும் புதிய வழிகாட்டுதல்கள் வைத்துள்ளாரா? அவரது நடவடிக்கை விசித்திரமாக உள்ளது என்கின்றனர் விவசாயிகள். நமது நிருபர்