சென்னை,ஏப்.27- தஞ்சாவூர்கோவில் திரு விழாவில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் பலியானது தொடர் பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஏப்.27) கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, “தஞ்சை மாவட்டத்தில் எதிர்பாராத வகையில் நடந்துள்ள இந்த விபத்தில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கி றோம். மேலும், கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். இம்மாதிரியான திருவிழாக்கள் என்பது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் கவனமாக செயல்பட்டிருந்தால் இந்த இழப்பை தவிர்த் திருக்க முடியும். இது திடீரென்று நடத்தப்பட்ட திருவிழா அல்ல. ஆண்டுதோறும் நடக்கும் விழா என்ற அடிப்படையில் இப்போது நடத்தியிருக்கிறார்கள்.
இதுகோடைக் காலம் என்பதால் இதுபோன்ற திருவிழாக்கள் இன்னும் அதிகமாக நடைபெற வாய்ப்புகள் இருக்கி றது. கடந்த இரண்டாண்டுகாலமாக கொரோன பெருந்தோற்றால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதனால் திரு விழாக்கள் நடத்தப்பட வில்லை. தற்போது அந்த தடை முழுமையாக விலக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் திருவிழாக்களும் வழி பாடுகளும் நடைபெறும் என்பதால் கிராம நிர்வாக மற்றும் உள்ளூர் அளவிலான அதிகாரிகளும் மிக கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் தஞ்சைபோன்று வேறு எங்கும் நடைபெறமால் தடுக்க முடியும்” என்றார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத கோவில்களாக இருந்தாலும் கிராமப்புறங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் காவல்துறையினர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையை கற்றுக்கொடுப்பதால் கோவில் திருவிழாக்கள் குறித்த வழிக்காட்டு விதி முறைகளை அரசு உருவாக்க வேண்டும் என்றும் மற்ற கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.