“பொதுத் துறை நிறுவனங்களின் தனியார் மயம் அரசுக்கு வருவாயை கொண்டு வந்து சேர்க்கிறது அல்லவா?அந்த கோணத்தில் அதை நேர்மறை விசயமாக பார்க்கலாமே?”.
இப்படி கேட்பவர்களும் இருக்கிறார்கள். இது நடுத்தர வர்க்க மனோபாவம். எவ்வளவு கெட்ட விசயத்தி லும் “நல்லது இது ஒன்று இருக்குதே... எல்லாத்தையும் பாசிட்டிவ் ஆக பாக்கணும்” இப்படி பேசுவது.
இரண்டு நோக்கங்கள்
பொதுத் துறை தனியார் மயத்திற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று நீண்ட கால கனவு. விடுதலைக்கு பின்னர் வேறு வழியில்லாமல், விருப்பமே இல்லாமல் உருவாக்கப்பட்ட பொதுத் துறையை தங்கள் கைவசம் கொண்டு வந்து விட வேண்டுமென்று பெரும் தொழிலதிபர்களுக்கு உள்ள வரலாற்று ஆசை. இரண்டாவது, அரசின் பொருளாதாரத் தோல்வியை மறைக்க, வருவாய் திரட்டலில் பெரும் வசதி படைத்தவர்களின் மீது கைவைக்காமல் இருக்க, உடனடி நிதி தேவையை ஈடு கட்ட அரசு பங்குகளை விற்பது. ஆனால் இரண்டாவதில் கூட நேர்மை இருக்கிறதா என்பது கேள்விக் குறிதான். அதிலும் கூட அடி மாட்டு விலைக்கு விற்று அரசுக்கு இழப்பை உருவாக்குவார்கள். காங்கிரஸ் அதிகாரப் பூர்வ தகவல் தொடர்பாளர் கௌரவ் வல்லப் அண்மையில் “சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” (CEL) விற்பனை பற்றி கூறியுள்ள கருத்துக்கள் முக்கியமானவை.
அடிமாட்டு விலைக்கு
- சி. இ.எல் குறித்த மதிப்பீடுகள் வெவ்வேறு அளவுகோல்க ளில் பார்த்தாலும் 957 கோடி முதல் 1600 கோடிகள் வரை இருக்கும்.
- ஆனால் அரசாங்கம் இதை தனியார் நிறுவனமான நந்தல் பைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிட்டெட்டுக்கு விற்ற தொகை ரூ .210 கோடி மட்டுமே.
- சி. இ.எல் நிறுவனத்தின் வசம் உள்ள நிலங்களின் மதிப்பு மட்டுமே கூட இந்த பங்கு விற்பனைத் தொகையை விஞ்சி விடும். தில்லி காஜியாபாத்தில் சி. இ.எல் -க்கு 2.02 லட்சம் சதுர மீட்டர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் நடப்பில் உள்ள சந்தை நிலவரப்படி அதன் மதிப்பு ரூ. 440 கோடி இருக்கும்.
- எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிறுவனம் லாபத்தில் இயங்குகிற நிறுவனம். 2020-21 இல் இதன் விற்பனை வருவாய் ரூ.296 கோடி. லாபம் ரூ. 136 கோடி. இதற்கு 31.10.2021 அன்று கைகளில் உள்ள ஆர்டர்கள் மட்டுமே ரூ.1592 கோடி. இந்த ஆர்டர்களை நிறைவேற்றினால் அதன் மூலம் மட்டுமே ரூ.730 கோடி லாபம் கிடைக்கும்.
- தேசத்தின் கேந்திர நலன்களுக்கு பயன்படக் கூடிய நிறுவனமும் ஆகும். உள் நாட்டு ஆராய்ச்சி கண்டு பிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றுகிற நோக்கோடு 1974 இல் உருவாக்கப்பட்ட நிறுவனம்.
- இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கி யுள்ள நந்தல் நிறுவனம் இந்த தொழிலில் எந்த அனுபவமும் அற்ற நிறுவனம். நந்தல் நிறுவனத்தின் பங்குகளில் 99% க்கும் அதிகமானவற்றை வைத்திருப்பது “பிரீமியர் பர்னிச்சர் அண்ட் இண்டீரியர்” என்பதாகும். ஆகவே அரசுக்கு வருவாய் என்ற இரண்டாம் நோக்கமும் இரண்டாம் பட்சமே. சித்தாந்த ரீதியாகவே பொதுத் துறையின் எதிரிகள் இன்றைய ஆட்சியாளர்கள். நிதி நெருக்கடிக்காக விற்பதாக சொல்வார்கள். அடி மாட்டு விலைக்கு விற்று அரசின் நெருக்கடியை இன்னும் அதிகரிக்கவும் செய்வார்கள். இதுல என்ன பாசிட்டிவ் இருக்கு சார்!