மன திடமும், கொள்கை உறுதியும், வீரமும் மிக்க “பெண் சிங்கம் கெளரி லங்கேஷ்” என்று இந்தப் படத்தை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தவர் அவர். கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் சமூகப் போராளிகளை தனது மகன்கள் என்றழைத்து பாசம் காட்டிய தாய் கெளரி லங்கேஷ். கௌரியின் தாய் அவரை பொறியியல் படிக்க வேண்டு மென்று விரும்பினார். கெளரி தேர்ந்தெடுத்ததோ ஜர்னலிசம். தந்தைக்குப் பின் சகோதரரால் நடத்தப்பட்டு வந்த கன்னட வார இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் அவரோடு கருத்து வேறுபாடு ஏற்பாட்டு வெளியேறினார். 2004 முதல் இறக்கும் வரை “கெளரி லங்கேஷ் பத்திரிகா” என்ற வார இதழை ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். விளம்பரங்கள் இன்றி மிகுந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தி யிலேயே இதனை நடத்தி வந்தார். கன்னட அறிவுஜீவிகள் மத்தியில் இதழ் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஓரளவிற்கு மக்கள் ஆதரவும் இருந்துள்ளது. அவருடைய இதழாசிரியர் வாழ்க்கை, போராட்டங்களும், ஆபத்துக்களும் நிறைந்திருந்தது. குறிப்பாக 2014 க்குப் பின் அவர் பலமுறை மிரட்டலுக்கு ஆளானார். தாக்குதல் முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் அவர் உறுதியாகவும், அச்சமின்றியும் இந்துத்துவா அமைப்பினரை எதிர்த்ததும், அவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர் சித்து எழுதியதுமே. கெளரியை வெறும் பத்திரிகையாளர் என்று மட்டுமல்ல பத்திரிகையாளர் மற்றும் இயக்கவியலாளர் (Jour nalist Activist) என்று அனைவருமை போற்றுகின்றனர். விரிவாக எழுதப்பட வேண்டிய பல ஆழமான சமூக, அரசியல் விசயங்கள் இந்த ஆவணப்படத்தில் நிறைந்திருக் கின்றன என்றால் மிகையில்லை.
ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் 1984 துவங்கி கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு மதரீதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். 1990 களில் நடந்த ஹூப்ளி கலவரம் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்குகள் குறிப்பிடத் தகுந்தவை. இதனை முன்னின்று நடத்தியவர் அப்போதைய ம.பி. மாநில முதல்வர் உமா பாரதி. அவர் மீது வழக்கு இருக்கிறது. பிணையில் வெளியில் வர முடியாத 32 கைது ஆணைகளும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபா புதன்கிரி மற்றும் தத்தரேயா பீடம் என்றழைக்கப்படுகிற இந்துக் களும், இஸ்லாமியர்களும் இணைந்து தொழுகையும், பூஜை களும் நடத்தி வந்த இடத்தைக் கலவரம் செய்து ஆக்கிர மித்தது மற்றும் அது தொடர்பான வழக்குகளில் கெளரி, இந்துத்துவா அமைப்புகளின் மோசமான மதவாத செயல்பாடு களை விமர்சித்து தனது பத்திரிகையில் எழுதினார். கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் இந்துத்துவ அமைப்புகள் இதனை தென்னிந்தியாவின் அயோத்தி என இன்றளவும் குறிப்பிட்டு மத மோதல்களை உருவாக்கி இந்து ஓட்டு வங்கியை பறித்துவிட முயன்று வருகின்றனர். கர்நாடகாவில் ஒரே காலத்தில் 27 சர்ச்சுகள் தாக்குதலுக்கு ஆளான போது அதனைக் கடுமையாகக் கண்டித்தார் கெளரி. நக்சலைட்டுகள் மீது அனுதாபம் கொண்ட அவர், நக்சலைட்டு களின் அரசியல் பாதை தவறென்றாலும், நக்சலைட்டுகள் எழுப்புகின்ற பிரச்சனைகள் குறித்து அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டுமென்று எழுதினார். சாகேத் ராஜன் என்ற நக்சலைட் போலீஸ் என்கவுண்டரில் போட்டுத்தள்ளப் பட்ட போது அதனை கடுமையாக விமர்சித்து எழுதினார். ராகவேஸ்வரா என்ற இந்து சாமியார் மற்றும் பிரேமலதா பிரச்சனையில் தலையிட்டு பிரேமலதாவுக்கு நீதி கிடைக்க கடுமையாகப் போராடினார். லிங்காயத்துக்கள் தங்களை தனி மதமாக அறிவிக்க கோரியபொழுது கெளரி அதனை முழுமையாக ஆதரித்து கட்டுரைகள் எழுதி நான்கு சிறப்பிதழ் களை வெளியிட்டார். கல்புர்கி கொல்லப்படுவதற்கு முன், லிங்காயத்துகளின் பூர்வீகத்தன்மையை ஆராய்ந்து அவர்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித சம்பந்தமு மில்லை என்று ஆதாரபூர்வமாக நிறுவினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போலி மதச்சார்பின்மையாளர் என்று இந்துத்துவ அமைப்புகளால் ஏளனம் செய்யப்பட்டார் கெளரி. “சாதியவாதம், மதவாதம், பிரதேசவாதம் மற்றும் ஆண் மேலாதிக்கம் என்று அனைத்திலிருந்தும் விலகியிருப்பதே உண்மையான ஜனநாயம், சமத்துவம்..” என்று கெளரி முழங்கினார். ஏராளமான போராட்டங்கள், நாடு முழுவதும் பயணங்கள் என்று எழுத்துப்பணிகளுக்கிடையே இயக்க வாதியாகவும் திகழ்ந்தார். சமரசமின்றி இந்துத்துவா அமைப்பு களை எதிர்த்துப் போராடியதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உடன் பிறந்த சகோதரி கவிதா லங்கேஷ் மற்றும் அவருடன் இதழிலும், இயக்கங்களிலும் நெருங்கி உழைத்த தோழர்கள், கே.எஸ். விமலா (அ.இ.ஜ.மா.சங்கம்), டீஸ்டா செதால்வத் (பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைப் போராளி), கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்றோர் அவரு டைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆவணப்படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் நம்மைக் கலங்க வைக்கிறது. ஜனவரி 29 கௌரி லங்கேஷ் அவர்களின் பிறந்த தினம்.