கோடிக்கணக்கான தொழிலாளர்கள் - துறைவாரி ஊழியர்கள் - விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள்
புதுதில்லி/சென்னை, மார்ச் 27 - ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக மார்ச் 28, 29 (இன்றும், நாளையும்) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் பேரெழுச்சியுடன் நடை பெறுகிறது. இந்த பொது வேலைநிறுத்தத் திற்கு ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா, ஏஐசி சிடியு, தொமுச, யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரியான அகில இந்திய சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டு மேடை அறைகூவல் விடுத்துள்ளது. இந்த பிரம்மாண்டமான வேலைநிறுத்தத்திற்கு விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர் இயக்கங்களும் இடது சாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த அறைகூவலை ஏற்று கடந்த மூன்று மாத காலமாக நாடு முழுவதும் ஒட்டுமொத்த தொழிலாளர் - விவசாயிகள் அமைப்புகள் முழுவீச்சில் வேலைநிறுத்த தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டன. 25க்கும் கோடிக்கும் அதிகமான தொழிலாளர் - துறைவாரி ஊழியர்கள் - விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ள இந்த மாபெரும் வேலைநிறுத்தம், இந்திய தொழி லாளி வர்க்கம் ஒன்றிய - பாஜக ஆட்சியாளர் களின் கொள்கைகளுக்கு எதிராக - மத வெறிக்கு எதிராக நடத்தும் மிகப்பிரம்மாண்ட மான யுத்தம் ஆகும். வேலைநிறுத்தத்தையொட்டி பல மாநிலங்கள் ஸ்தம்பிக்க உள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் வேலைநிறுத்த பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடைபெறஉள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை தடுக்க ஆட்சி யாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கேரளத்தில் வேலைநிறுத்தத்தை தடை செய்வதாக உயர்நீதிமன்றம் திடீர் உத்த ரவு பிறப்பித்துள்ளது. எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் இந்த எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது என சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் கூறியுள்ளார். ஒன்றுபட்ட போராட்டத்தை இரண்டு நாட்களும் உறுதியுடன் நடத்திடு வோம் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்த எழுச்சி 12 பிரதான கோரிக்கைகளை ஒன்றிய அரசுக்கு முன் வைக்கிறது. அவை வருமாறு:
1. தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA - Essential Defence Services Act) ரத்து செய்க.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுக.
3. எவ்விதத்திலும் தனியார்மயத்தை அனுமதியோம். தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்க.
4. அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்குக.
5. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவருக.
6. வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளித்திடுக.
7. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கிடுக.
8. கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை அளித்திடுக.
9. வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு. பணக்காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்திடுக.
10. பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடு. விலைவாசியைக் கட்டுப்படுத்திட உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திடுக.
11. ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுக.
12. தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவா. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்திடுக.