tamilnadu

img

மேலும் வலிமையோடு முன்னோக்கி... கோடியேறி பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்) கேரள மாநில செயலாளர்

மா  ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்து மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் முன்னோடியாக மாநில மாநாடு எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் சீர்திருத்த முன்னேற்றங்களின் விசயத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு சாட்சியாக விளங்கிய பூமியாகும் எர்ணாகுளம். 1912 ஆம் ஆண்டு கிருஷ்ணாதி ஆசானின் தலைமையில் காயல் மாநாடு நடத்தி சமூக சீர்திருத்த முன்னேற்றங்களை வரலாற்றில் இடம்பெறச் செய்தது, சகோதர இயக்கங்களின் வளர்ச்சியில் பங்கு வகித்தது மற்றும் சமூக சீர்திருத்த முன்னேற்றங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகளில் ஜொலிக்கும் அத்தியாயங்களில் ஒன்றான பாலியம் சத்தியாகிரகத்தின் நினைவுகள் ஆகியவை நிறைந்து நிற்கும் மாவட்டமாகும் எர்ணாகுளம். தொழிலாளர் இயக்கத்தின் எண்ணிலடங்கா போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியது. மேலும் இடப்பள்ளி காவல்நிலையத் தாக்குதல் போன்ற வீரம்செறிந்த செயல்பாடுகளுக்கும் எர்ணாகுளம்  சாட்சியாக அமைந்துள்ளது.

போராட்டங்களின் பல்வேறு ஏடுகளால் நிரம்பிவழியும் எர்ணாகுளத்தில் மீண்டும் நாம் ஒன்றுசேரும்போது அரசியல் ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாகவும் கட்சி மேலும் முன்னேறியுள்ளது. கடந்த மாநாடு நடந்தபோது மாநிலத்தில் 4,63,472 பேர் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது மாநாடு நடைபெறும் வேளையில் அந்த எண்ணிக்கை 5,24,221 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாநாட்டின் போது 32,967 இருந்த கட்சிக்கிளைகளின் எண்ணிக்கை தற்போது 36,649 ஆகும். 2,193 என்ற எண்ணிக்கை யிலிருந்த பகுதிக்குழுக்களின் எண்ணிக்கை 2,314 அதிகரித்துள்ளது. இந்த வகையில் ஸ்தாபன ரீதியான முன்னேற்றத்தை அடைவதற்கும் இந்த கால அளவில் நம்மால் முடிந்தது என்பது பெருமைப்படத்தக்க விசயமாகும். 

பெண்களின் பங்களிப்பு

கேரள மக்கள் தொகையில் பாதிக்குமேல் உள்ள பெண்களின் பங்களிப்பு நமது கட்சி ஸ்தாபனத்தில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு உயர்ந்து வரவில்லை என்ற பிரச்சனை நாம் எதிர்கொண்டதுதான். ஒரு கட்சி கிளையில் இரண்டு பெண்களாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்ற நிலைபாட்டை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த காலகட்டத்தில் நம்மால் முடிந்துள்ளது. அனைத்துக் கிளைகளிலும் அது சாத்தியமாகவில்லை என்றாலும் மொத்தக் கிளைகளைவிட இரண்டு மடங்கிற்கும் மேலாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு நம்மால் முடிந்துள்ளது. கிளைச் செயலாளர்களாக 1,991 பெண்கள் மாநிலம் முழுவதும் உயர்ந்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒரு செய்தியாகும். கட்சியின் பல்வேறு அமைப்புகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை சிறந்த முறையில் கொண்டுவருவதற்கு நம்மால் முடிந்தது என்பதும் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும்.

கடந்த சட்டமன்றத்தில் நமது கட்சியின் ஆதரவுபெற்ற சுயேட்சை உள்பட மொத்தம் 63 உறுப்பினர்கள் நமக்கு இருந்தார்கள். அது தற்போது 67 உறுப்பினர்களாக அதிகரிக்கச் செய்ய முடிந்தது என்ற பெருமையுடன் இந்த மாநாட்டை கட்சி வழிநடத்துகிறது. தொடர் ஆட்சி கிடைத்தது என்பது மட்டுமல்ல, உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து முன்னேறிச் செல்வதற்கும் இந்த கால அளவில் நம்மால் இயன்றது என்பதும் பெருமையே. தேசிய அளவில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து முன்னேறுவதற்கு வலிமை சேர்க்கும் திட்டங்களை வகுக்கமுடியும் என்று இந்தக் காலத்தில் நாம் நடத்திய செயல்பாடுகள் தெளிவுபடுத்தின.
கேரளத்தில் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய பிரளயத்தை நாம் எதிர்கொண்டோம். பிரளயத்திலிருந்து மீண்டுவருவதற்கு கட்சியும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் களத்திலிறங்கி தீவிரமாக செயல்பட்டன. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுடன் சேர்ந்து நடத்திய செயல்பாடுகளை அனைத்துக் காலத்திலும் கேரள மக்கள் நினைவில் கொள்வார்கள். மக்களின் பிரச்சனைகளில் அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது என்ற கம்யூனிஸ்ட் கண்ணோட்டத்தை அடிபிசகாமல் நடைமுறைப்படுத்துவதற்கான தலையீடுகளும் இந்த கால கட்டத்தில் நடத்த முடிந்தது என்பதும் பெருமையான விசயமாகும். 

துயரங்களைப் போக்க...

இது போன்று கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களைக் காக்கும் பணியில் நாம் ஈடுபட்டோம். கட்சி தோழர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் களத்தில் இறங்கி கோவிட் துயரத்தில் மக்களுடன் நின்றார்கள். 1940 ஆம் ஆண்டுகளில் அம்மை, காலரா போன்ற தொற்றுகள் ஏற்பட்ட காலத்தில் அதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் மக்களை நிம்மதியடைச் செய்வதிலும் முன்களத்தில் நின்ற நமது தோழர்களின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து முன்மாதிரியாக நடவடிக்கைகளை தற்போதும் மேற்கொண்டோம். போராட்ட, ஸ்தாபன இயக்கங்களுடன் மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும் இயன்றவரையில் விரிவான ஏற்பாடுகளை நாம் வளர்த்தெடுத்துள்ளோம் என்ற மதிப்பீட்டிற்கு வரும் ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. 

இந்த மாநாட்டு காலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணிக்கு தொடர்ச்சியான ஆட்சி கிடைத்தது என்பதாகும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, மதவாதத்திற்கு எதிராக வலுவான நிலைபாடுகள் எடுத்து முன்னோக்கிச் சென்றது இரண்டாவது முறையாக மக்கள் வெற்றியை நம் கையில் தந்ததற்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தல் அறிக்கையில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஏறக்குறைய அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டு ஜனநாயக கலாச்சாரத்திற்கு ஒரு புது வடிவம் கொடுப்பதற்கு இந்த கால கட்டத்தில் முடிந்தது.

மாநில அரசும் எதிர்காலக் கடமைகளும்
மாநில அரசின் செயல்பாடுகளும் அதோடு இணைந்து கட்சி எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தும் விரிவான விவாதங்கள் நடத்தி அரசின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்கும் கட்சியால் முடிந்தது. மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்த சூழலில் சோவியத் நாடுகளின் அனுபவமும் இந்தியாவில் இடதுசாரி அரசுகளின் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த படிப்பினைகளையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு புதிய பாதையை அiiத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கட்சியின் மாநிலக்குழு கண்டறிந்தது. அதன் அடிப்படையில் 2021 ஆகஸ்ட் 16,17 தேதிகளில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ’மாநில அரசும் எதிர்காலக் கடமைகளும்’ என்ற கட்சி ஆவணம் இத்துறையின் மற்றுமொரு புதிய முன்னேற்றமாகும். 

அணிசேர்க்கை பிரச்சனை களையெல்லாம் கடந்து பலமான ஒற்றுமையுடன் கட்சி முன்னோக்கிச் செல்லும் சூழல்தான் நிலவுகிறது.  காலத்திற்கேற்ற தேவைகளை மனதில் கொண்டு கட்சியை வலுப்படுத்துவோம் என்ற ஒரே லட்சியத்துடன் தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்ட மாநாடுகள்தான் கேரளம் முழுவதும் நடைபெற்றன.

வளர்ச்சி, மக்கள் முன்னேற்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம்தான் மாநிலத்தில் இடதுசாரி இயக்கத்திற்கு தொடர்ச்சியான ஆட்சி கிடைத்தது என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். அதனால்தான் அரசின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் தடைபோடுவது என்ற நிகழ்ச்சி நிரலுடன் வலதுசாரி சக்திகள் செயல்படுகின்றன. உண்மையான இடதுசாரிகள் என்று என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களும் இத்தகைய செயல்பாடுகளுடன் இணைந்து நிற்கும் தன்மையும் மாநிலத்தில் நிலவுகிறது. இத்தகைய செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம்போட்டுக் காட்டுவதற்கும் மக்கள் நலத் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் மாநில மாநாடு திட்டம் வகுக்கும். கட்சி ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதற்கும் கொள்கைரீதியாக முனனெடுத்துச் செல்வதற்கும் உதவும் தீர்மானங்கள் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்படும். மதவாத சக்திகள் நமது சமூகத்தில் பலவழிகளில் தலையீடுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு மிகச் சரியான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் இந்த முன்வைக்கும்.

முக்கியமான வெற்றி

கடந்த மாநில மாநாட்டிற்குப் பிறகு மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக இடதுசாரி மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கவும் தொடர்ந்து ஆட்சி அமைக்கவும் முடிந்தது. அதிகமான ஜனநாயக சக்திகளை அணியில் சேர்த்துக் கொண்டு இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அடித்தளத்தை விரிவுபடுத்தி முன்னோக்கிச் செல்வதற்கும் இத்தகைய சூழலில் நம்மால் முடிந்தது. யு.டி.எஃப்ம் பாஜகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி அமைத்து செயல்பட்ட போதிலும் பாஜ தனது கணக்கைத் துவங்கவிடாமல் பார்த்துக் கொள்ளவும் அவர்களது வாக்கு சதவீதம் குறைத்திடவும் முடிந்தது என்பதுதான் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான வெற்றியாகும்.

நாட்டில் இன்று இந்துத்துவ, கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் விருப்பங்களுக்கு இணங்க தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிபுரியும் காலமாகும். இந்தச் சூழலில் பாஜகவை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்ற வேண்டியது நமது முக்கியமான கடமையாகும். 

சமூகத்தில் மதவாதத்திற்கு எதிராக அனைத்துதரப்பு மக்களையும் இணைத்துக் கொண்டு வலுவான இடதுசாரி ஒற்றுமை என்ற அடிப்படையில் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. கேரளத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக இடதுசாரி ஜனநாயக சக்திகளின் வலுவான ஒற்றுமை அதிகரித்து வந்துள்ளது. உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நாடு முழுமைக்கும் முன்மாதிரியான செயல்பாடுகளை எல்.டி.எஃப் அரசு முன்வைத்துள்ளது. இவற்றை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்லும் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய மாநாடாக எர்ணாகுளம் மாநாடு இருக்கும் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.

தமிழாக்கம்: மு.சங்கரநயினார்