விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த தாசில்தார் பணியிடை நீக்கம்
கேரள அரசு நடவடிக்கை
அகமதாபாத் “ஏர் இந்தியா” விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் திருவல்லா பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதாவின் மரணத்தை விமர்சித்த துணை வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் வெள்ளரிக்குண்டு (காசர்கோடு மாவட்டம்) துணை வட்டாட்சியர் பவித்ரன் முகநூல் பதிவில்,”ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது. ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றார். அதற்கான பலனையும் அவர் அடைந்து விட்டார்” என அவர் கூறினார். பவித்ரனின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ரஞ்சிதா ஓராண்டு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு செவிலியர் வேலைக்காகச் சென்றார். இடையில் அவருக்கு மாநில சுகாதார சேவையில் வேலை கிடைத்தது. எனினும் இங்கிலாந்து நாட்டில் ஒப்பந்தம் இருப்பதால் அவர் அரசு வேலைக்கு செல்ல முடியவில்லை. சொந்த ஊருக்கு ரஞ்சிதா கடந்த வாரம் வந்தார். பத்தனம்திட்டாவில் சொந்தமாக வீடு கட்டி வரும் ரஞ்சிதா, அதன் இறுதிப்பணிகளை பார்வையிட்டு மீண்டும் லண்டன் செல்லுகையில் விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.