அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதம் வருமாறு;
தமிழ்நாட்டில் வருகிற 2026-இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களையொட்டி ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி என்பது இந்த ஆண்டும் வழக்கம் போல சுருக்க முறை திருத்தமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய பத்திரிக்கை செய்திகளில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதன்படி, தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தொடங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதற்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும், அதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
ஏற்கனவே பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களது இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இணைக்கப்படும் என்று வற்புறுத்தி தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான முறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுடைய கூட்டத்தை நடத்தி அவர்களுடைய ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியினை நடத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோருகிறது. அவசரகதியில் பீகாரில் நடைபெற்று வருவது போன்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டு போய்விடும் ஆபத்து உள்ளது.
எனவே, தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக கோருகிறோம். மேலும், இந்த கூட்டம் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்படும் வரை இதுகுறித்து மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தங்களுடைய நடவடிக்கையையும், உடனடி பதிலையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.