tamilnadu

img

வளர்ச்சிக்கும் உதவாது; வறுமையையும் ஒழிக்காது! - ஜி.ராமகிருஷ்ணன் ,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பட்ஜெட்டின் முக்கிய மான இலக்கு என ஒன்றிய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிடுகிறார். ஆனால், பட்ஜெட்டின் நிதி ஒதுக்கீடும், திட்டங் களும் நிதியமைச்சரின் கூற்றுக்கு முற்றிலும் மாறானவை. ஒன்றிய அரசு சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாகத்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. பட்ஜெட் என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; அது ஆளும் அரசாங்கத்தின் அரசியல் அறிக்கையே ஆகும். பட்ஜெட்டிற்கு முந்தைய நாள் சமர்ப்பிக்கப் பட்ட பொருளாதார ஆய்வறிக்கையையும் நிதிநிலை அறிக்கையையும் இணைத்துப் பார்த்தால் மோடி அரசின் நோக்கம் புரியும். ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை  காண முடியாது  என்றும்,  மக்களின் வாங்கும் சக்தியை அதிகப் படுத்து வதன் மூலமே  வளர்ச்சியை எட்ட முடியும் என ஆய்வறிக்கை  கூறுகிறது. ஆனால்,  மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அடிப்படையிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.

கொரோனாவுக்கு முந்தைய ஆண்டு 2019-20 மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)  7.8 சதவிகிதம். நடப்பாண்டில் 2023-24 வளர்ச்சி  6.1 சதவிகிதமாக இருக்கும் என ஐஎம்எஃப் மதிப்பீடு செய்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை எட்டுவதற்கான ஆலோசனைகள், நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் இல்லை. கடந்த பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீடு  ரூ.42 லட்சம் கோடி. நடப்பு பட்ஜெட்டின் மொத்த  ஒதுக்கீடு ரூ.45 லட்சம் கோடி. ஒதுக்கீட்டில் 7.5  சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் பண வீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீடு அதிகரிக்க வில்லை.

விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள்

உணவுக்கு கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.2.87 லட்சம் கோடி. ஆனால் நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.1.97 லட்சம் கோடி.  உர மானியத்திற்கு கடந்தாண்டு ஒதுக்கீடு ரூ.2.25 லட்சம் கோடி. நடப்பாண்டில் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது ரூ.1.75 லட்சம் கோடி.  விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவதாக கடந்த தேர்தலின்போது  ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண் வளர்ச்சியில் தேக்கம் நீடித்து வருகிற பின்னணியிலும் ஒன்றிய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டு மல்ல, வேளாண் வளர்ச்சியைக் காணவும், விவசாயிகள் நலன்களை பாதுகாக்கவும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக ஒதுக்கீட்டை குறைத்திருப்பது வேளாண் வளர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும்.

பிரதம மந்திரி விவசாயிகள் நிதி

இத்திட்டம் அறிவிக்கப்படுகிறபோது 14 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என  ஒன்றிய அரசு கூறியது. துவக்க ஆண்டில் 11.84 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டு களில் இத்திட்டத்தால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கடந்த ஆண்டு 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே  இத்திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம்

2020-21 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.1,11,500  கோடி. கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்  பட்டது ரூ.89,000 கோடி. நடப்பாண்டின் ஒதுக்கீடு ரூ.60,000 கோடி. இத்திட்டத்தை மெல்ல மெல்ல ஒழித்திடும் நோக்கத்தோடு தான் ஒன்றிய அரசு ஒதுக்கீட்டை குறைத்து வருகிறது.

சுகாதாரம்

நோய்த் தடுப்பு, நோய் சிகிச்சை உள்ளிட்ட சுகாதாரத்துறைக்கு குறைந்தபட்சம் ஜிடிபியில் 3 சதவிகிதமாவது நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது நீண்டநாள் கோரிக்கை. ஆனால், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீடு குறைந்து வருகிறது. இப்போதும் நோய் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவில்  மக்கள் செலவிடும் தொகை 67 சதவிகிதம். அரசு செலவிடுவது 33 சதவிகிதம். இந்நிலையில் கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதி 2.20 சதவிகிதம், இவ்வாண்டு 1.98 சதவிகிதமாக குறைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் உள்ளிட்டு பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதர சில மாநிலங்களில் இத்தகைய மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும் மதுரை மாநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டு மக்க ளுக்கு பாஜக அரசு துரோகம் செய்துள்ளது.

கல்வி

ஒன்றிய அரசு கல்விக்கு ஜிடிபியில்  6 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு கல்விக்கு ஒதுக்கிய தொகை என்பது குறைக்கப்பட்டது. 2021-22ல் 2.9 சதவிகிதம். 2022-23 ல் 2.8 சதவிகிதமாக இருந்த நிதி ஒதுக்கீடு நடப்பு பட்ஜெட்டில் 2.51 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியையும், உயர்கல்வியையும் தனியார்மயமாக்கக் கூடிய நோக்கத்திலேயே படிப்படியாக கல்விக்காக ஒதுக்கக் கூடிய தொகையை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது.

தொழில் வளர்ச்சி

தேசம் முழுவதும் சுமார் 70 சதவிகிதம் உழைப்பாளிகளுக்கு சிறுகுறு தொழில்கள் வேலை வாய்ப்பை அளிக்கின்றன. மொத்த தொழில் உற்பத்தியில் 50 சதவிகிதம் சிறுகுறு தொழில்களிலிருந்து உருவாகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கி களுக்கு திருப்பி செலுத்தாத கடன் சுமார் 10 லட்சம் கோடியை ரத்து செய்தது. ஆனால்,  ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங் களை உருவாக்கி சிறுகுறு தொழில்களை பாது காத்திட நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. கடந்த 20.12.2021 அன்று நாடு முழுவதும் உள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்களின் 170 கூட்டமைப்புகள் இணைந்து அகில இந்திய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள்.  சிறுகுறு தொழில்களுக்கான கச்சாப் பொருள் விலை குறைப்பு, ஜி.எஸ்.டி வரி குறைப்பு உள்ளிட்ட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல கோடி சிறுகுறு நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்தன. இப்போராட்டத்தில் நிறுவன உரிமையாளர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களில் பணிபுரியும் பல கோடி தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஆனால், நடப்பு பட்ஜெட்டில் கச்சாப் பொருள் விலை குறித்தும், ஜி.எஸ்.டி வரி குறைப்பு பற்றியும் எந்த ஆலோசனையும் இல்லை. மேலும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் சிறுகுறு தொழில்கள் வாங்கும் கடனுக்கு 6 சதவிகிதமாக இருந்த வட்டியை 10 சத விகிதமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு வெட்டு

கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5.2 லட்சம் கோடி. நடப்பு நிதி நிலை  அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.3.7 லட்சம் கோடி. ரூ.1.5 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு ஜனநாயக இயக்கங்கள் வலி யுறுத்திய அடிப்படையில் 5 கிலோ அரிசி,  5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப் பட்டது. இத்திட்டத்தோடு மானிய விலையில் (அரிசி கிலோ ரூ. 3/-, கோதுமை கிலோ  ரூ.2/-) வழங்கப்படும் திட்டமும் அமலில்  இருந்தது. தற்போது மானிய விலையில் அரிசி, கோதுமை விற்பனை செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டது. இதன்  மூலம் உணவுப் பாதுகாப்பிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையையும் நடப்பு பட்ஜெட்டில் அரசு குறைத்துவிட்டது. இலவச  அரிசி போதுமானதாக இல்லாத குடும்பங்கள் வெளிச்சந்தையில் கிலோ ரூ.40, 50 என்று வாங்க வேண்டியுள்ளது.

செய்ய வேண்டியது என்ன?

நிதி நிலை அறிக்கையை பல வல்லுநர்கள் ஆய்வு செய்து கட்டுரைகள், இதழ்களில் வெளியாகின்றன. அவற்றில் நடப்பு நிதிநிலை அறிக்கையின் பாதகமான அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுவது வரவேற்புக்குரியது. நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்து மக்கள் நலனுக்கு விரோதமான அம்சங்களை சுட்டிக்காட்டுவதோடு அவற்றை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்த ஆக்ஸ்பாம் நிறுவனம், இந்தியாவில் மேல்தட்டில் இருக்கக் கூடிய ஒரு சதவிகித கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளிட்ட பெரும்  பணக்காரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவான செல்வத்தில் 45.5 சதவிகிதத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். அதேவேளை, அடித்தட்டில் உள்ள 50சதவீதம் மக்கள், மேல்தட்டில் உள்ள 10சதவீதம் பணக்கார்கள் செலுத்தும் வரியை விட 6 மடங்கு கூடுதலாக செலுத்துகிறார்கள். இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும்மேலும் அதிகரித்து வருவதையே இந்த விபரம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் அதிகரித்து வருவது பொரு ளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். வளர்ச்சி பாதிக்கப்படுகிறபோது மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிப்புக்குள்ளாகும். மக்கள் நலனை மறுத்து கார்ப்பரேட் நலன்களை பாதுகாக்கக் கூடிய அடிப்படை யில் தான் மோடி அரசின் நடப்பாண்டு பட்ஜெட்டும் அமைந்துள்ளது. நவீன தாராள மய பொருளாதார கொள்கையின் அடிப்படை யிலேயே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நடப்பாண்டு நிதி நிலை அறிக்கை, மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலே ஆகும்.  மக்கள் நலனுக்காக மக்களை திரட்டிப் போராடுவது நமக்கு முன்னால் முக்கியமான கடமையாகும்.