என்னம்மா... ஏதோ ரொம்ப யோசனைல இருக்குற மாதிரி இருக்குதே..,?
சார், நீங்களா.. ஆமா சார்... பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தேன்... ஏதாவது வேலைக்கு போற மாதிரி படிச்சா என்னனு வீட்டுல சொன்னாங்க..
சரியாத்தான சொல்றாங்க..
ஏன் வேலைக்குப் போகலனு கேக்குறது அவங்க பொறுப்பு. எப்படியாவது வேலைக்குப் போறது எங்க பொறுப்பு. ஆனா அவங்களுக்கு எங்களோட கஷ்டம் புரியறதில்லையே..
எங்க சொல்லு பாப்போம்..
முதல்ல என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க... நான் நகரத்துப் பொண்ணா இல்லேனா கிராமத்துப் பொண்ணா..
நகரத்துல படிக்குற கிராமத்துப் பொண்ணு..
அப்போ என்னோட தன்மை என்ன.. நகரமா, கிராமமா..
ரெண்டும் கலந்துதான் இருக்கும்...
அதுதான உண்மை... நெறய விஷயங்கள் கிடைக்குற இடம் நகரம்.. நகரத்துப் பசங்க, பொண்ணுங்களுக்கு அதுல பலன் கிடைக்கும்... எங்கள மாதிரி பசங்க, பொண்ணுங்களுக்கு நகரத்துல கிடைக்குற விஷயங்கள எப்புடி ஏத்துக்குறதுன்னு தெரிய மாட்டேங்குது.. இந்த நிலைமைய எப்புடிப் புரிய வைக்குறது..?
புரியுது.. ஆனா சில பேரு நல்லா செட் ஆயிடுறாங்களே... குறிப்பா, பசங்க சீக்கிரமாவே நகரத்துக்கானவங்களா மாறிடுறாங்க..
உண்மைதான்... ஆனா பொண்ணுங்களால அப்புடி முடியலையே.. லீவுதான.. அங்க என்ன பண்றனு வீட்டுல கேள்வி வரும்.. கிளம்பிப் போகனும்.. காதுல விழுந்த விஷயங்கள ஆலோசனை பண்றதுக்கும் நகரத்துல வாய்ப்பு நிறைய இருக்கு.. எங்களுக்குதான் நேரம் ஒதுக்க முடியல..
சரி.. சரி... ஆனா, யதார்த்தம் அதுதான..
ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க.. எல்லார் வீட்டுலயும் புரிஞ்சுக்கனுமே.. கேட்டா, அதான் உங்களுக்கு நெறய நிகழ்ச்சிகள் நடக்குதேனு சொல்லிடுறாங்க... அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மொத்தமா எல்லாரையும் உக்கார வெச்சு பேசிட்டுப் போயிடுவாங்க... கணக்கு காட்டதான் அந்த நிகழ்ச்சிகள்லாம்.. அதெல்லாம் பொதுவானது. எல்லாருக்கும் ஒரேமாதிரியான வழிகாட்டல் சாத்தியமா?
இல்ல.. அது சாத்தியமில்ல.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இப்போ வழிகாட்டுற எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கும்னு சொல்லிறவும் முடியாது..
சரி, எப்படியாவது ஒரு இடத்துல சேர்ந்து போட்டித் தேர்வுக்குப் படிச்சுரலாம்னு பாத்தா, எங்கப்பாவோ சொத்த விக்கச் சொல்லிருவாங்க போலருக்கு.. முதல்ல போய்க் கேக்குறப்ப 20 ஆயிரம், 25 ஆயிரம்னு சொல்றாங்க.. வேலை கிடைக்குற வரைக்கும் வரலாம்னு சொல்வாங்க.. அங்க இருக்குற எல்லா வசதியையும் பயன்படுத்திக்கலாம்னு சொல்றப்ப, ஏதோ வேலையே கிடைச்சுட்ட மாதிரி இருக்கும்..
இது எல்லா இடத்துலயும்னு சொல்ல முடியாதே..
எந்த இடம் நல்ல இடம்னு தெரியுறதுக்குள்ள எங்கப்பா திணறிடுவாரு.. இருங்க, நான் இன்னும் சொல்லி முடிக்கல... நெறய இருக்கு. தொண்டை வரைக்கும் வந்துருக்கு.. சொல்லத்தான் முடியல..
இரு.. இரு.. கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோ..
சார்.. ஒரு மாதிரித் தேர்வுக்கான வினாத்தாள் 60 ரூபா. அப்புறமா இந்தப் புத்தகம் வாங்குனாத்தான் படிக்க முடியும்னு சொல்வாங்க... ஒவ்வொரு வகுப்புலயும் வாங்கிட்டீங்களா.. ஏன் வாங்கலனு கேட்டுட்டே இருப்பாங்க.. அவங்க வெச்சுருக்குற புத்தகக்கடைலதான் வாங்கனும்..
அந்த 20 ஆயிரம், 25 ஆயிரத்துல இதெல்லாம் வரலையா...?
அதான் மேட்டரே... அதத்தான் சொல்ல வர்றேன். சேர்றப்ப வேலை கிடைக்குற வரைக்கும் இந்த தொகைதான்னு சொல்வாங்கள்ல.. அந்தத் தொகை பத்தி அதுக்கப்புறம் பேசவே மாட்டாங்க... அது பயிற்சி மையத்துக்குள்ள நுழையுறதுக்குதான்..
நானும் கேள்விப்பட்டு இருக்கேன்...
வீட்டுல இருக்குறவங்களுக்கும் இது தெரியும்.. நுரை தள்ளிரும் அவங்களுக்கும்.. இருந்தாலும் பணத்த ரெடி பண்ணித் தர முயற்சி பண்ணுவாங்க...
எல்லார் வீட்டுலயும் தர முடியாதுல்ல..
அதான் சில பேரு நடுவுலயே படிக்குறத விட்டுருவாங்க.. கட்டுன பணமும் போச்சு..
புத்தகத்த வெளில வாங்கிரலாமே..?
ஆமா.. நீங்கள்லாம் கூட இதப்படிங்க, அதப்படிங்கனு சொல்லிர்றீங்க.. புத்தகத்த ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிரலாம்.. நாங்கதான் ரெண்டு கலந்தவங்களாச்சே.. நகரத்துல முகவரி இல்ல... கிராமத்து முகவரியக் கொடுத்தா பெரும்பாலும் அந்த ஊருக்கு சர்வீஸ் இல்லனு வருது.. இருந்தாலும் பத்து நாளாகும்.. நகரத்துல ரெண்டு நாள்ல வந்து சேந்துரும்..
என்னாச்சு.. பேசிட்டு இருக்குறப்ப ஏதோ சிரமப்படுற மாதிரி தெரியுதே..
ஆமா சார்... சாப்பாடு ரொம்பக் காரம்.. காபி எக்ஸ்பிரஸ்ல போய் ஒரு காப்பி சாப்பிடலாமா..?
முதல்லயே சொல்லிருக்கலாமே.. போலாம்.. போலாம்..
காபிக்குச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தனர்.
ஹாஸ்டல் சாப்பாடு நமக்கு ஒத்து வரனும்.. பாதிப்பேரு இதுக்காகவே மறுபடியும் ஊருக்குப் போயிடுவாங்க..
கொஞ்சம் பழம், கிழம்னு தினமும் சாப்பிட்டுக்க வேண்டியதுதான்..
அது என்ன சும்மாவா கிடைக்குது.. இருங்க இன்னும் நிறைய இருக்கு.. காலைல ஒரு மணிநேரம் படிக்கலாம்னு பாத்தா, குளிக்குறதுக்கு இடம் கிடைக்காது.. யாராவது உள்ள போயிருவாங்க... காத்திருக்கனும்.. வேற யாரும் போயிராம பாத்துக்கனும்.. இப்புடித்தான் நேரம் போயிரும்..
எத்தனை மணிக்கு திரும்ப வருவ..?
சீக்கிரம் வந்துருவேன்.. உங்களோட இருக்குறவங்களும் முக்கியம்... அவங்க படிக்குறவங்களா இருக்கனும். இல்லேனா விளையாடுறதுலயே நேரம் போயிரும்... சினிமாவுக்குப் போற ஃப்ரெண்ட்ஸ்னா அவ்வளவுதான்.. கிராமத்துப் பொண்ணுங்களுக்கு இப்படி சினிமாவுக்குப் போற வாய்ப்பும் கிடைக்காதுல்ல..
அடேங்கப்பா..
அப்புறமா எங்க தலைமுறைக்கே உள்ள மொபைல் போன் பாக்குறது... சில ஃப்ரெண்ட்ஸ் போன் பண்ணுவாங்க.. அவங்க பண்றதே புலம்புறதுக்குதான்... இப்போ நான் உங்க கிட்ட புலம்புறன்ல.. அதுமாதிரி..
புலம்பல் இல்ல... இப்ப நீ எனக்கு வகுப்பு எடுத்துருக்க... நான் என்ன சொல்ல வந்தேன்னா.. இந்த பாடத்திட்டம் மாறியிருக்குறது பத்தி நீ கேட்ட... நான்தான் இன்னிக்குப் பாக்கலாம்னு சொன்னேன்..
பாடத்திட்டத்துல 9 யூனிட் இருந்துச்சு... இப்போ ஆறாக் குறைச்சுட்டாங்க.. அதான் சந்தேகம்..
யூனிட்டோட எண்ணிக்கைதான் குறைஞ்சுருக்கு... எதையும் நீக்கல.. மத்த யூனிட்டோட சேத்துருக்காங்க.. புவியியலுக்கான பாடத்திட்டத்தைப் பாத்தா, கடைசில ஒரு வரில நடப்பு நிகழ்வுகள்னு போட்டுருக்காங்க..
வினாத்தாள் வந்தாதான் தெரியுமா..?
போன தடவை என்ன நடந்துச்சு தெரியுமா..? வெளில வந்த தேர்வர்கள்கிட்ட பேசுனேன்.. வினாத்தாள் எப்புடி இருந்ததுன்னு கேட்டா, கஷ்டமா இருந்துச்சு... வினாக்கள்லாம் ரொம்ப ஈசியா கேட்டு வெச்சுட்டாங்கனு சொன்னாங்க..
ஈசினா நல்லதுதான சார்..?
அதாவது ஓரிரண்டு ஆண்டு தயாரிச்சவங்க அடிப்படையான விஷயங்கள விட்டுட்டு, ஆழமா படிச்சுருப்பாங்க... அடிப்படையானது தேர்வுக்கு அவசியமில்லனு விட்டுருவாங்க.. போன தடவை அப்புடி வினாவாக் கேட்டுட்டாங்க..
அப்படின்னா, அடிப்படையானத எப்பவுமே மறக்கக்கூடாது.. புரியுது சார்.
என்ன போன்ல அழைப்பு வந்துகிட்டே இருக்கு போலருக்கே..
ஃபிரெண்ட்ஸ்தான்... நீங்களும் வாங்கனு சொன்னேன்.. அய்யோ.. அவரு அறிவுரையா தந்துட்டே இருப்பாரேன்னு சொல்லிட்டு வரல..
இவ்வளவு நேரம் யாரு பேசிட்டிருந்தா.. நீதான... நான் கேட்டுட்டுதான இருந்தேன்..
ஆமா சார்... வர்றேன். நாளைக்குப் பாக்கலாம்.