கோவி.பால.முருகு
எங்கள் வீட்டில் செல்லப் பிராணி
எங்கும் நிறைந்து இருக்குது-அவை
பொங்கும் அன்பில் எங்க ளோடு
பொழுது முழுதும் கழிக்குது!
வெள்ளை நாயோ அன்பால் தாவி
வீழ்ந்து மேலே புரளுது-அதன்
கள்ள மில்லா சாம்பல் குட்டி
காலைச் சுற்றி வருகுது!
கருப்புப் பூனை வாலை முறுக்கி
கண்கள் உருட்டிப் பார்க்குது-அதன்
சிறுத்தை மீசை சிலிர்த்து நிற்க
சீறி எலியைப் பிடிக்குது!
ஆட்டுக் குட்டி இராமு என்றால்
அழைப்பில் மகிழ்ந்து வருகுது-பசு
மாட்டுக் கன்று பவானி யோடு
மகிழ்ச்சி யோடு ஓடுது!
பேசா விட்டால் என்ன அவைகள்?
பேணும் அன்பில் மகிழுமே!-நாம்
ஆசை கொண்டு காட்டும் செய்கை
அகமும் புறமும் நெகிழுமே!