tamilnadu

அகம் நெகிழும்!

கோவி.பால.முருகு

எங்கள் வீட்டில் செல்லப் பிராணி
    எங்கும் நிறைந்து  இருக்குது-அவை
பொங்கும் அன்பில் எங்க  ளோடு
    பொழுது முழுதும்  கழிக்குது!
 
வெள்ளை நாயோ அன்பால் தாவி
    வீழ்ந்து மேலே புரளுது-அதன்
கள்ள மில்லா  சாம்பல்  குட்டி
    காலைச் சுற்றி வருகுது!

கருப்புப் பூனை வாலை முறுக்கி
    கண்கள் உருட்டிப் பார்க்குது-அதன்
சிறுத்தை மீசை சிலிர்த்து நிற்க  
    சீறி எலியைப் பிடிக்குது!

ஆட்டுக் குட்டி இராமு என்றால்
    அழைப்பில் மகிழ்ந்து வருகுது-பசு
மாட்டுக் கன்று பவானி யோடு
    மகிழ்ச்சி யோடு ஓடுது!

பேசா விட்டால் என்ன அவைகள்?
    பேணும் அன்பில் மகிழுமே!-நாம்
ஆசை  கொண்டு காட்டும்  செய்கை
    அகமும் புறமும் நெகிழுமே!