வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
பெரம்பலூர், அக். 19- வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாய்டு போன்ற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். வீட்டைச்சுற்றி டயர்கள், கொட்டாங்குச்சி, ஆட்டுக்கல் மற்றும் உரல் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வயல் மற்றும் திறந்தவெளியில் வேலை பார்க்கும் ஆண்/பெண் இருபாலரும் மழையினால் ஏற்படும் இடி, மின்னலின் போது, வேலை செய்வதை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். புயல் மற்றும் அதிகப்படியான காற்றின்போது மரங்களின் அடியில் நிற்பது, விளம்பர பதாகைகளின் கீழ் நிற்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். மழைக்காலங்களில் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் நீர் நிரம்பி இருக்கும் என்பதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். தரை பாலங்களை வாகனம் மற்றும் கால்நடையாக கடப்பதை தவிர்த்திட வேண்டும். கால்நடைகளை மரங்கள் மற்றும் மின் கம்பங்களின் கீழ் கட்டுவதால் இடி, மின்னல் தாக்கி இறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது, எனவே, அதை தவிர்த்திட வேண்டும். மேலும், கால்நடைகளையும் பாதுகாப்பாக மேய்ச்சலுக்கு அனுப்பிட வேண்டும். மழை காலங்களில் மின் கம்பங்கள், வயல்வெளிகள் மற்றும் இதர இடங்களில் அறுந்து விழுந்திருந்தால் எச்சரிக்கையுடன், மின்சாரத் துறையின் 9498794987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும். மேலும் பேரிடர் காரங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 அல்லது 18004254556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைப்பிடித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
