tamilnadu

img

பாலஸ்தீன மக்களின் துயரங்களை மறைப்பது, இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளில் பங்கேற்பதாகும் – தமுஎகச மாநிலக்குழு

பாலஸ்தீன மக்களின் துயரங்களை மறைப்பது, இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளில் பங்கேற்பதாகும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களைப்பிரன் ஆகியோர் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

பாலஸ்தீன மக்களின் தற்காலப் போர் துயரங்களை ஒரு குழந்தையின் வழியாக உயிர்ப்போடு பதிவு செய்துள்ள திரைப்படம் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' (ஹிந்த் ரஜப்பின் குரல்). இது துனிசிய நாட்டின் இயக்குனரான ’கௌதர் பென் ஹானியா’ என்பவரால் இயக்கப்பட்ட திரைப்படமாகும்.  துனியா மற்றும் பிரான்ஸ் நிறுவன்ங்களின் கூட்டுத் தயாரிப்பு ஆகும். இத்தாலி நாட்டில் நடைபெறும் 82ஆவது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் 2025 செப்டம்பர் 3ஆம் தேதி இத்திரைப்படம் முதல் முதலாக திரையிடப்பட்டது. அவ்விழாவிலேயே 8 பிரிவுகளில் இத்திரைப்படம்  விருதுகளை குவித்தது. அதன் பின் நடைபெற்ற பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் தொடர்ச்சியாக இப்படம் திரையிடப்பட்டு தொடர்ந்து சர்வதேச விருதுகளை பெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் அமெரிக்காவின் ஆஸ்கார் விழாவில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டு பலரின் பாராட்டையும் பெற்றது.

இச்சூழலில் இந்தப் படத்தினை இந்தியாவில் திரையிடுவதற்கு கடந்த பிப்ரவரி 2025ல் மும்பையைச் சேர்ந்த திரைப்பட விநியோக நிறுவனமான 'ஜெய் விராத்ரா என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு விண்ணப்பித்திருந்தது. மார்ச் 2026ல், இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC), இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தடை விதித்துள்ளது. இதன் மூலம் இப்படம் இந்தியாவில் திரையிட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சொல்லியுள்ள காரணம் வினோதமானது. இப்படத்தின் இந்திய விநியோக நிறுவனத்தின் உரிமையாளரான மனோஜ் நந்தவானாவை அழைத்து, ”இப்படத்தைத் திரையிடுவது இந்தியா-இஸ்ரேல் உறவை முறிக்கக்கூடும்" என்று CBFC உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ”இந்தப் பதிலை மிகவும் மோசமான விசயமாகப் பார்க்கிறேன், மேலும் இந்தப் படம் குறித்த எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் கூறாத சான்றிதழ் வாரியம் இந்தப் படத்தை வெளியிடுவதன் வாயிலாக வேறொரு நாட்டுடனான இந்தியாவின் உறவு முறிந்துவிடும், என்று கூறுவது ஏற்க முடியாதது” என்று அவர் தன் கவலை தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேலின் நேரடி ஆதரவு நாடுகளான அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா உள்ளிட்ட அத்தனை மேற்குலக நாடுகளும் இப்படத்திற்கு தடை வழங்கவில்லை என்பதோடு விருது கொடுத்து கொண்டாடியுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டிலேயே கூட இந்தப் படத்தை திரையிட தடையில்லை. ஆனால் பாலஸ்தீன மக்களோடு 75 ஆண்டுகளுக்கும் மேலாக துணை நிற்கும் இந்திய அரசின் தற்போதைய இஸ்ரேல் மீதான கருணைக் குரல் அதிர்ச்சி தருவதாக உள்ளது. அதோடு இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை இது வரை இந்திய இஸ்ரேல் உறவு குறித்து பெரிதாக ஏதும் சொல்லாத சூழலில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் போன்ற தன்னாட்சி அமைப்புகள், 'வெளியுறவுத் துறையின் மனம் நோகுமோ?' என்றெல்லாம் தாங்களாக கவலை கொள்வது இந்த அமைப்புகளின் தன்னாட்சி எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

2014க்கு பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் போன்ற அமைப்புகள் அதன் சுயேச்சை தன்மையை இழந்து, அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

இது , இந்நாட்டின் ஜனநாயக அமைப்பு முறைக்கே ஆபத்தானது. பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு  கடந்த 2014இல்  ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் மீதான ஒன்றிய அரசின் தலையீடு எல்லை மீறிப் போகிறது. உதாரணமாக ஏககாலத்தில் வெளியான, இந்திய காவல் துறையில் பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள், பழங்குடியின மக்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் அவர்களுக்கான நியாயம் உண்மையாகவே கிடைத்ததா?  இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை எப்படி பரப்புகிறார்கள் என்பதை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”சந்தோஷ்” என்கிற படம் உட்பட மக்கள் துயரங்களை பேசும் ஜனநாயகக் குரல்களுக்கான திரைப்படங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் இந்திய மக்கள் மத்தியில் வகுப்புவாத அரசியல் நஞ்சை விதைக்கும் கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ், துரந்தர் போன்ற வெறுப்புவாத, பிரிவினைவாத திரைப்படங்களுக்கு எந்தத் தணிக்கையும் இல்லாமல் அப்படியே வெளியிடுவதும், இந்தியத் திரைப்பட விழாக்களில் திரையிடுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதும், ஒடுக்குகிறவர்களை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவதும் தான் கலையின் வேலை. ஆனால் அந்த வேலையை செய்ய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் ஒன்றிய அரசு உள்ளிட்ட அனைத்தும் தடையாக நிற்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அதோடு பாலஸ்தீன மக்களின் துயரங்களை மறைக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன கொடுமைகளை மூடி மறைக்கும் வகையிலும் இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஒரு வகையில் இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளுக்குத் துணை போவதே ஆகும். இந்திய வெளியுறவுக் கொள்கையின் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதன் நீட்சியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே உடனடியாக ”தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்” படத்தை இந்தியாவில் திரையிட மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அனுமதியளிக்க வேண்டும் என்றும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் போன்ற அமைப்பும் அதன் தன்னாட்சி மற்றும் சுயேச்சைத் தன்மையை இழக்க அனுமதிக்கக்கூடாது என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.