தஞ்சாவூர், நவ.19 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை சார்பில், “தமிழ் இலக்கியங்களில் அறுவை மருத்துவக் கருவிகள்” என்ற தலைப்பில், சிறப்புச் சொற்பொழிவு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் பேசுகையில், “சித்த மருத்துவத்தில் 18 துறைகள் இருந்தன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு சித்தர் தலைவராக இருந்துள்ளார். போரில் ஏற்படும் காயங்களை எவ்வாறு குணப்படுத்துவது என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. மணிமேகலையில் குழந்தைகளுக்கு எவ்வாறு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளது.
தொற்று நோய்களான காசநோய், ஊழிநோயான காலரா பற்றியும் இலக்கியத்தில் மருத்துவக் குறிப்புகள் உள்ளன. வெண்கடுகு மற்றும் நெய்யையும் சேர்த்து எரித்தால் பிறர்க்கு நோய் வராமல் தடுக்கலாம் என்ற மருத்துவ முறை சங்க இலக்கியத்தில் இருந்துள்ளது. பழமொழி நானூறு, பதிற்றுப்பத்து, நாலாயிர திவ்வியபிரபந்தம் ஆகிய நூல்களில் அறுவை சிகிச்சை செய்வற்கு பயன்படுத்திய கருவிகள் இடம் பெற்றுள்ளன. பழங்காலத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள் பனை ஓலையில் எழுதப்பட்டுள்ளன. கம்பராமாயணம், மணிமேகலை, குறுந்தொகை ஆகிய நூல்களில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் மருத்துவக் குறிப்புகள் தெலுங்கு மொழிக்கு சென்றன. 16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு சித்த மருத்துவம் தோன்ற தொடங்கியுள்ளது. இக்காலத்தில், 24 வகையான மருத்துவக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தமிழ் மொழி என்றும் அழியாது. அதுபோலவே தமிழ் சித்த மருத்துவமும் என்றும் அழியாது” என்றார்.