tamilnadu

img

டிஆர்இயூ-வின் வரலாற்று நாயகன்

1938ஆம் ஆண்டு பொன்மலை பணிமனையில் Fuel Clerk ஆக பணியில் சேர்ந்த தோழர். அனந்தன் நம்பியார் அடுத்த ஆண்டே அன்றைய சவுத் இந்தியன் ரயில்வே லேபர் யூனியனில் (SIRLU) தீவிரமாக செயல்படத் துவங்கினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் இடையே யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தியாகி பரமசிவத்தின் மறைவிற்கு பின் 1942இல் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். முழுநேர சங்க பணிக்காக 1943இல் வேலையை ராஜினாமா செய்தார். முதல் சம்பள கமிஷன் வர காரணமான 1946 வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கி மலபார் போலீசின் அடக்குமுறைக்கு உள்ளானார். இந்த போராட்டத்தில் தான் பொன்மலை சங்கத்திடலில் போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்கு 5 தோழர்கள் இன்னுயிர் நீத்தனர்.

அதேபோல் 1960, 1968 வேலைநிறுத்த போராட்டங்களிலும் தலைமை வகித்தார். ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்த இந்திரா காந்தியின் அவசரகால அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். போனஸ் கோரிக்கைக்காக நடைபெற்ற 1974 வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை இணைத்து களம் கண்டார். 1958ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடத்திய 10 நாள் உண்ணாவிரதம் தென்னகத்தை குலுக்கியது. அதை தொடர்ந்து பர்சனல் பிராஞ்சு உருவாக்கப்பட்டது. விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யக் கூடாது என அவர் நடத்திய போராட்டம் தான் DAR விதிகளை உருவாக்கியது. 1946ஆம் ஆண்டு ரயில்வே தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ரயில்வே அமைச்சர் சந்தானத்தை தோற்கடித்து 1952ஆம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினர் ஆனார். 1962, 1967 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தை தொழிலாளர் கோரிக்கை எழுப்பும் மன்றமாக மாற்றினார். 50 ஆண்டு காலம் ரயில்வே தொழிற்சங்க பணிக்காக தன்னை அர்ப்பணித்த தோழர் அனந்தன் நம்பியார் டிஆர்இயூ-வின் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தார். 1991 அக்டோபர் 11 அன்று மரணமடைந்தார். ரயில்வே ஊழியர் இன்று அனுபவிக்கும் பல்வேறு உரிமைகளில் அவரது முத்திரை உள்ளது. அவரது நினைவை போற்றுவோம். வி.அரிலால், டிஆர்இயூ பொதுச்செயலாளர்