tamilnadu

சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை

புதுக்கோட்டை, டிச.27 - புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் அருகே மீனவர் சாலையைச் சேர்ந்தவர் அம்ஜத்கான் (44). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 14 வயது  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள் ளார். இதனால் சிறுமி கருவுற்றதை அடுத்து பெண்ணின் தாய் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அம்ஜத்கானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் யோக மலர் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசார ணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளி அம்ஜத்கானுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.சத்யா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. அரசுத் தரப்பில் ஏற்கெனவே ரூ.3.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசு மேலும் ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.