திருப்பூர், பிப். 3 - “தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தொழி லாளர் சட்டத் தொகுப்பை நடை முறைப்படுத்த முயன்றால், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தைச் சந்திக்க நேரிடும்” என்று ஒன்றிய பாஜக அரசுக்கு, சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிஐடியு-வின் சிறப்புப் பேரவைக் கூட்டம், திருப்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் ஹேமலதா பேசியதாவது:
தொழிலாளர் குறைகேட்க 2 நிமிடம் தானா?
ஒன்றிய பட்ஜெட்டிற்கு முன்னதாக பல்வேறு பிரிவினரிடமும் கோரிக்கை கள் குறித்து ஆலோசனை செய்வ தாக சம்பிரதாயத்திற்கு கூட்டம் நடத்து கின்றனர். கூட்டத்திற்கு அழைத்து ஒரு தொழிற்சங்கம் 2 நிமிடம் மட்டும் கருத்து சொல்லுங்கள் என்று கூறுகிறார்கள். இந்த பெரிய நாட்டில் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு 2 நிமிடம் போதுமா?
இதுவரை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களில் தொழிலாளர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும், இபிஎப் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நாம் கொடுத்து இருக்கிறோம். ஆனால் அதையெல்லாம் அவர்கள் அமல்படுத்துவதில்லை. மாறாக, கார்ப்பரேட் பெரும் முதலாளி களுக்கு சலுகைகளை வாரி வழங்கு கிறார்கள். அவர்களுக்கு சலுகைகளை கொடுத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக சலுகைகள் கொடுத்தும் முதலீடுகள் அதிகரிக்கவில்லை, குறைந்துதான் இருக்கிறது.
வேலைநேரத்தை அதிகரிக்க எந்த துணிச்சலில் சொல்கிறார்கள்?
இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் தொழி லாளர்கள் உழைக்க வேண்டும் என்கிறார். ஒரு படி மேலே போய் ‘எல் அண்ட் டி’ நிர்வாகி சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மனைவிகளை முறைத்துப் பார்த்து கொண்டிருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்று பேசுகிறார். அதாவது வாரத்தில் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் விகிதம் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இவர்களுக்கு எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது? இதனால் யார் பலன டைவார்கள்? உற்பத்தித்திறன் அதி கரிக்கும் என்று சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதால் முதலாளி களுக்கு லாபம் அதிகரிக்கும். இதை தொழி லாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருட்டுத்தனமாக சட்டங்கள் திருத்தம்
தொழிலாளர் சட்டத் தொகுப்பில், யார் தொழிலாளிகள் பக்கம் இருக்கிறார்கள்? யார் முதலாளிகள் பக்கம் இருக்கிறார்கள்? வேளாண் சட்டம் நிறைவேற்றியதில் யார் விவசாயிகள் பக்கம் இருந்தார்கள்? யார் கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம் இருந்தார்கள்? என்பதை தொழிலாளர்கள் அறிய வேண்டும். தொழிற்சங்க ஊழி யர்கள் இதை நன்கு அறிந்து, தொழி லாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்துப் பகுதி தொழி லாளர்களையும் அணிதிரட்ட வேண்டும்.
ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நகர்ப்புறத்திலும் வேலை இல்லை, கிராமப்புறங்களிலும் வேலை இல்லை என்ற நெருக்கடி உள்ளது. ஆனால் அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா, மிட்டல் ஆகிய ஐந்து பெரும் முதலாளிகள்தான் இந்த அரசு என்ன கொள்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்று தீர்மானிப்பதாக ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர்
வெளிப்படையாக கூறுகிறார்.
இந்த அரசு பெருமுதலாளிகளுக்கு சாதகமாக தாராளமய கொள்கையை அமல்படுத்துகிறது. இதற்கு மாற்றுக் கொள்கையை சிஐடியு முன்வைக்கிறது. பெரும் பணக்காரர்களுக்கு ஒரு சதவிகிதம் வரி விதித்தாலே, அரசுக்கு போதுமான நிதி கிடைக்கும். அனைவருக்கும் தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய முடியும் என்று சொல்கிறோம். ஆனால் அதை செவி மடுக்க அரசு தயாராக இல்லை.
சாதி, மத அடிப்படையில் தொழிலாளர்களை பிரிக்க முயற்சி
ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நாட்டில் தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு தீர்வு காண அரசு மறுக்கிறது. ஏனென்றால் பாஜக, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, நாட்டை பிளவு படுத்தக்கூடிய, ஆர்எஸ்எஸ் என்ற பாசிச அமைப்பால் இயக்கப்படுகிறது. அவர்கள் சொல்லக்கூடிய இந்துத்துவாவும், இந்து மதமும் ஒன்று அல்ல. இரண்டும் வேறு, வேறு என்று சாவர்க்கரே சொல்லி இருக்கிறார். மதத்தைப் பயன்படுத்தி அதி காரத்தை கைப்பற்றுவதே அவர்கள் நோக்கம். எனவே தான், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே மொழி’, ‘பொது சிவில் சட்டம்’, ‘ஜம்மு - காஷ்மீருக்கான 370 சட்ட பிரிவு ரத்து’ என்று அடுத்தடுத்து ஜன நாயக விரோதமாக செயல்படுகின்றனர். மக்களை சாதி, மதம், மொழி, பிராந்திய அடிப்படையில் பிரிக்கப் பார்க்கின்றனர்.
தொழிற்சாலைகளில், வேலை செய்யும் இடங்களில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று எல்லா மதங் களை சேர்ந்தவர்களும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இவர்களது ஒற்றுமையை மத ரீதியாக பிளவுபடுத்தினால் தொழி லாளர்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள், உரிமைகளைப் பற்றி குரல்கள் எழுந்து விடாமல் தடுத்து முதலாளிகள் ஆதாயம் அடையலாம் என்று செயல்படுகின்றனர்.
கார்ப்பரேட் - வகுப்புவாத சக்திகள் கூட்டை எதிர்த்து முறியடிப்போம்
வகுப்புவாத சக்திகளும், கார்ப்பரேட் பெரும் முதலாளிகளும் கைகோர்த்து ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். முதலாளிகள் மதமாக பிரிவதில்லை. இதை தொழிலாளர்கள் புரிந்து கொண்டு ஒன்றுபட வேண்டும். சிஐடியு சங்கத்தை பலப்படுத்த வேண்டும்.
தொழிலாளர் சட்ட தொகுப்பின் அறி விக்கையை வெளியிடும்போது உடன டியாக வேலை நிறுத்தத்திற்கு செல்வது என்று, ஒன்றுபட்டு போராடுவது என்று முடிவு செய்துள்ளோம்.
முன்னதாக மார்ச் 18 அன்று தில்லியில் அகில இந்திய கருத்தரங்கம் நடைபெறு கிறது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமை யை பாதுகாக்க தர்ணா, ஆர்ப்பாட்டம், போராட்டம் என வலுவான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். அகில இந்திய அளவிலான கருத்தரங்கில் பொது வேலைநிறுத்தம் நடத்த தயாராவோம். அந்தப் போராட்டத்தை சம்பிரதாயப்பூர்வ மாக நடத்தக் கூடாது. அனைத்துப் பகுதி தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தி வலுவாக நடத்த வேண்டும்.
பிப்ரவரி 5 அன்று பட்ஜெட் எதிர்ப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் வெற்றிகரமாக நடத்த வேண்டும். இவ்வாறு சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா கூறினார்.
இவரது ஆங்கில உரையை சிஐடியு அகில இந்தியச் செயலாளர் ஆர். கரு மலையான் தமிழில் மொழி பெயர்த்தார்.
சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலைமையிலான இந்த சிறப்புப் பேரவையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் ஜி. சம்பத், டி. குமார் உள்பட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிஐடியு அனைத்து தொழிற்பிரிவுகளின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.