tamilnadu

img

அரசியல் சாசனத்திற்கு ஆபத்து என்றால் கம்யூனிஸ்ட்டுகள் தடுத்து நிறுத்துவோம்!

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ‘வெறுப்பு அரசியலை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு மாநாடு சனிக்கிழமை திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் காஜாமுயீனுத்தீன் பாகவி தலைமை வகித்தார். அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

வெறுப்பு அரசியலை வேர் அறுப்போம் என்ற இந்த முழக்கம் நேரடியாக ஒரே ஒரு இயக்கத்திற்கு தான் பொருந்தும். அது பாரதிய ஜனதா கட்சி. இந்த நாட்டில் பாசிசத்தை, மத பகைமையை, மதவெறுப்பை தூண்டிவிடுவதை மட்டுமே தன் அரசியல் நோக்கமாக, அரசியல் வழியாக கொண்டிருக்கிறது பாஜக. அந்த இயக்கத்தின் அரசியல் பாதையை முறியடிப்பது என்ற ஒற்றை முழக்கம்தான் ‘வெறுப்பு அரசியலை வேரறுப்போம்’. வெறுப்புக்கு எதிராக பகைமைக்கு எதிராக, சக மனிதனின் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதுதான் இந்த நாட்டின் அரசியல் சாசன சட்டம். அரசியல் சாசன சட்டத்தை வீழ்த்துவதற்கு அவர்களிடம் இருக்கிற மிகப்பெரிய ஆயுதம் வெறுப்பு அரசியல். அந்த ஆயுதத்தால் எதையும் செய்ய முடியும் என நம்புகிறார்கள். செய்து காட்டுகிறார்கள். இதுதான் வெற்றி பெறும் என்ற ஒரு மன நிலையை இந்திய சமூகத்தில் நிலை நிறுத்த நினைக்கிறார்கள்.  விவசாயிகளின் எழுச்சி மிக்க போராட்டத்திற்கு பிறகும் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்றால், அவர்களின் ஒரே ஆயுதம் வெறுப்பு அரசியல். நீங்கள் உரிமையை முழங்குங்கள், சகோதரத்துவம் பேசுங்கள், அரசியல் சாசனத்தை பேசுங்கள், ஜனநாயக மாண்பை பேசுங்கள், சமத்துவத்தின் கீதத்தை பாடுங்கள்; ஆனால் வெறுப்பு என்ற ஒரு நெருப்பு என் கையில் இருக்கும் வரை எல்லா வீட்டையும் தீ வைத்து கொளுத்த முடியும் என்று நம்புகிற இந்த தீய சக்தியை ஒழிப்பதுதான், வீழ்த்துவது தான் இந்தியாவின் விமோசனத்திற்கான ஒரே பாதை என்பதை நாம் உரக்க முழக்க வேண்டியுள்ளது. 

இவர்களின் அரசியல் என்பது வெறுப்பை விதைப்பது, வெறுப்பை நன்றாக விதைப்பவனுக்கு பதவி கொடுப்பது. இந்தியா அமைதியாக இருக்க இவர்கள் ஆட்சி நடத்தவில்லை. இந்தியா பற்றி எரிவதற்காக ஆட்சி நடத்துகிறார்கள். வெறுப்பில் தான் இவர்களின் மொத்த மூலதனம் உள்ளது. சக மனிதனின் மீதான உறவை, உணர்வை சகோதரத்துவத்தை நெருப்பை கொண்டு எரிக்கின்ற வெறுப்பு அரசியலுக்கு எதிராக, “அன்பே எங்கள் ஆயுதம்; சகோதரத்துவமே எங்கள் தத்துவம்” என்று ஓங்கி முழங்கும் 130 கோடி இந்தியர்களாகிய நாங்கள் உங்கள் வெறுப்பு அரசியலை வேர் அறுக்காமல் விடமாட்டோம்.  எல்லா மதத்திற்கும் இருக்கிற ஜனநாயக சமத்துவத்தை காக்கின்ற, நிலைநிறுத்துகின்ற அரசியல் சாசனத்திற்கு ஒரு ஆபத்து என்றால், கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் உயிரை கொடுத்தேனும் தடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசு வெறுப்பு அரசியலை உருவாக்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பார். திமுக இயக்கமும் துணை நிற்கும்” என்றார். 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற மாநாடு நடத்த வேண்டிய நிலை கவலையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியலை உருவாக்கி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறது. இந்த மாநாடு ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது” என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பாஜகவை சேர்ந்த 2 பேரை கைது செய்ய வேண்டும் என்பது மட்டும் கோரிக்கை அல்ல. வெறுப்பு அரசியலை வேரறுக்க வேண்டும். இந்த வெறுப்பு அரசியல், உள்நோக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்படுகிறது” என்றார்.  மாநாட்டில், முகமதுநபியை அவதூறாக பேசிய பாஜகவைச் சேர்ந்த நூபுர்சர்மா, நவீன்ஜிண்டாலை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழக அரசு மதக்கலவர தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். நாட்டில் நிலவும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.