tamilnadu

img

உண்ணுதல்.. ஊட்டுதல்.. பருகுதல்.. பருக்குதல் ..!

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைதானே வளரும் என்பது முதுமொழி. ஒரு கணவன் அவன் மனைவியை ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தை நன்றாக ஊட்டத்துடன் வளரும் என்பதே இதன் பொருள். உண்ணுதல் என்பதுதானே உண்பது. ஊட்டுதல் என்பது பிறர் ஊட்டிவிடுவது. இவையாவும் திட உணவு வகைகளையே பெரும்பாலும் குறிக்கிறது. திரவ வகை உணவுகளை உண்பதற்கும் ஊட்டுவதற்கும் வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.அவைதான் பருகுதல், பருக்குதல். பருகுதல் என்பதுதானே பருகுவது. பருக்குதல் என்பது பிறர் பருக்கி (ஊட்டி) விடுவது. நீர் உணவுகளை சாப்பிடுவதை குடித்தல், அருந்துதல் என்றும் சொல்கிறோம். குளிர் பானங்களை பருகுவீர்! என்றே விளம்பரம் செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.

தண்ணீர் குடித்தல்தான் மதுவகைகளை அருந்துதல் என்கிறார்கள். பேச்சுவழக்கில் தண்ணியடித்தல் என்கிறார்கள். குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்பது அறிந்ததுதானே! தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்போம்! தண்ணீர் அருந்தவும் செய்வோம் . கூழானாலும் குளித்துக்குடி என்பது திரவ உணவு என்பதால்தான். பருகுதல் இயல்பானதுதான். பருக்குதல் என்பது தாய் அல்லது மற்றவர் கைக்குழந்தைகளுக்கு ஊட்டுவதுதான். பாலூட்டுதல் தனி. சோறூட்டுதல் வேறு. பால்கஞ்சி, பால்சோறு ஊட்டுதல் உண்டு. கிராமங்களில் இப்போதும் வழக்கத்தில் உள்ளது குழந்தைக்கு கஞ்சி பருக்கியாச்சா என்று கேட்பது. பால்புகட்டுதல் என்றும் சொல்வதுண்டு. பாடம் புகட்டுதல் என்பது தனி. மற்றவர்களுக்கு உண்ணக்கொடுப்பதும் சொல்லிக்கொடுப்பதும் வலிந்து, கற்றுக்கொடுப்பதும் புகட்டல், பாடம் புகட்டுதல் ஆகும். உணவு வகைகள் அல்லாமல் தின்பண்டங்கள் கொடுப்பது தின்பது ஆகும். தின்னக்கொடுப்பதும் தின்று தீர்ப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆயினும் நொறுக்குத்தீனி தின்பதை தவிர்த்தலே நலம். ஊட்டச்சத்துக்களை உண்பது மிகவும் அவசியம்.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். ஊன்மிக விரும்பு என்றார் பாரதியார். உண்போம். பருகுவோம். உடல்நலம் பேணுவோம்.”