சென்னை,மே 7- தமிழ்நாட்டு மக்கள் என்மீதும் ஆட்சியின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற அதிகமாக உழைக்க தயாராக இருப்ப தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சனிக்கிழமை(மே7) காலை 10 மணிக்கு கூடியதும், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் சுருக்கம் வருமாறு:- தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவுபெறுகிறது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடனும், உளப்பாங்குடனும் உழைத்திருக்கி றேன் என்கிற மனநிறைவோடுதான் இந்த மன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு தனிமனிதனின் வரலாற்றில் வேண்டுமானால் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின், மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல்போன்ற விரிந்த சாதனைகளைச் செய்துள்ளோம்.
தோழமை உறவுகளுக்கும்...
நான் கலைஞர் அல்ல. அவரைப்போலப் பேசத் தெரியாது. அவரைப் போல எழுதத் தெரியாது. அவரைப்போல உழைக்க முயன்று பார்ப்பேன் என்று அளித்த உறுதிமொழியை இந்த ஓராண்டு காலத்தில் காப்பாற்றியிருக்கிறேன். நூற்றாண்டு பழமை கொண்ட தமிழ்நாடு சட்ட மன்றத்தில் என்னை தலை நிமர்ந்து நிற்க வைத்த கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை இந்த மாமன்றத்துக்குள் முதலமைச்சர் என்ற தகுதியோடு நிற்க வைத்த திமுக மற்றும் தோழமை உறவுகளாக எங்களோடு எப்போதும் பயணித்துக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நிறைவேற்றிய வாக்குறுதிகள்!
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றுவோம் என்பதுதான் வாக்குறுதி. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 60 முதல் 70 விழுக்காடு நிறைவேற்றி இருக்கிறோம். இவை அனைத்தையும் பட்டியல் போடுவதற்கு காலநேரம் போதாது. ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, ஏற்கனவே இருந்ததைத்தான் பெயர் மாற்றி இருக்கிறீர்கள்’ என்று சிலர் விமர்சிக்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. இவர்கள் தெரிந்து பேசுகிறார்களா, தெரியாமல் பேசுகிறார்களா என்பது புரியவில்லை. நான் கேட்கிறேன்; மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி என்பது ஏற்கனவே இருந்ததா? கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய் தரப்பட்டதா? ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதா? பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதா? இலங்கைத் தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததா? பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்டதா? அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்பட்டதா?
நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி ரத்து செய்யப்பட்டதா? தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டிருந்ததா? கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? மக்களைத் தேடி மருத்துவம் சென்றதா? இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டதா? நம்மைக் காக்கும் 48 திட்டம் இருந்ததா? தமிழ்வழியில் படித்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இருந்ததா? கல்லூரிகளை நோக்கி வரும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு 1,000 ரூபாய் தரப்பட்டதா? இப்படி என்னால் கேட்டுக்கொண்டே இருக்க முடியும்.
எங்களது நோக்கம் என்ன?
நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம். சொல்லாததையும் இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடலின் உள்ளடக்கம்.
தடைகளை தகர்த்து..
எனது வாழ்வில் தடைகளை பலதையும் கடந்துதான் வந்திருக்கிறேன். அதனால் மக்கள் என் மீதும் இந்த அரசு மற்றும் அமைச்சர்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்போதும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். மக்கள் ஆதரவு பெருக பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்ப்பார்ப்பு அதிகமாகிறது. அதனை காப்பாற்ற நாம் கடினமாக உழைத்தாக வேண்டும் என்றும், அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல. இந்த அமைச்சரவையே இன்னும் அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார். ஓராண்டு நிறைவை யொட்டி சட்டப்பேரவை வளாகமும், தலைவர்களின் உருவப் படங்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.