கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் ஆறு மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்காக வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் தொடங்கியது.
இந்த சமயத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவி சால்வை அணிந்து கல்லூரிகளுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்களின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதால் பிரச்சனை தீவிரமடைந்தது. இதையடுத்து மாநில அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியது.
கடந்த வாரம், நூற்றுக்கணக்கானவர்கள் ஹிஜாப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததை பார்த்த ஹிஜாப் அணிந்த பல முஸ்லிம் மாணவிகளில் 20 வயது நிரம்பிய சைமாவும் ஒருவர். அவர்கள் காவித்துண்டு, தலைப்பாகை அணிந்திருந்தனர். மேலும் ஜெய் ஸ்ரீ ராம் அல்லது “ராமருக்கு வெற்றி” என்று கூக்குரலிடுகிறார்கள் இந்த. முழக்கமும் அவர்கள் அணிந்திருந்த நிறமும் இந்து வலதுசாரிகளுடன் தொடர்புடையது.
அவர் படிக்கும் வகுப்பில் சைமா ஒருவர் மட்டும் தான் முஸ்லிம். அதனால் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தனது வகுப்பு நண்பர்கள் பலரை பார்த்து அவர் மனம் வெதும்பியுள்ளார்.
அவரைப் போல் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தெஹ்ரின் பேகம், ஆயிஷா ஷாஹீன், அலியா அசாதி, ஹஸ்ரா ஷிஃபா ஆகிய நான்கு முஸ்லிம் மாணவிகள், தங்களின் உரிமைகளுக்காக நடந்த போராட்டங்களில் தாங்கள் இழந்ததை விவரிக்கின்றனர்.
பிப்ரவரி 5- அன்று வெளியிடப்பட்ட கர்நாடக மாநில அரசு ஆணை வகுப்பறைகளில் “பொது ஒழுங்கை” பாதிக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதித்தது. பிப்ரவரி 10 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியது, கல்வி நிறுவனங்களில் அனைத்து மத ஆடைகளையும் தடை செய்தது.
“நான் முதலில் என் மன அமைதியை இழந்தேன். நாங்கள் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறோம். இந்தப் பிரச்சனையால் நான் பல முஸ்லிமல்லாத நண்பர்களை இழந்தேன். எங்களை எதிர்க்க வைத்தது யார் என்று தெரியவில்லை. இது நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறேன். நாங்கள் ஹிஜாப் பிரச்சனையை வகுப்புவாதமாக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் எங்களை வேறுபடுத்திக் கொள்வதில்லை”என்கிறார் உடுப்பியில் உள்ள அரசு பியு கல்லூரி மாணவி அலியா அசாதி. கல்லூரி நிர்வாகம் தமக்கு ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று முதலில் கோரிய ஆறு மாணவர்களில் அசாதியும்
ஒருவர்.
அசாதியுடன் இணைந்து ஹிஜாப் கோரிக்கைககாகப் போராடும் மாணவி ஹஸ்ரா ஷிஃபா, “நான் முஸ்லிம் அல்லாத நண்பர்களை இழந்துவிட்டேன். அவர்கள் எங்களை மிகவும் வெறுக்க ஆரம்பித்தனர். குறைந்தபட்சம் எனது வீட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆனால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. என் வீட்டில் நான் படிக்கும்போதெல்லாம் இவையெல்லாம் என் நினைவுக்கு வருகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எனது பெற்றோரை பெருமைப்படுத்த வேண்டும். எனக்கு என் உரிமைகள் கிடைக்க வேண்டும். கர்நாடக அரசும், நீதிமன்றங்களும் எங்களுக்கு அதிக உரிமைகளை வழங்கும்போது, எங்கள் கல்லூரி ஏன்
எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஹிஜாப் முஸ்லிம் சகோதரிகளின் பெருமை” என்றார்.
குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில் பல ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு, திடீரென தடை விதிக்கப்பட்டது.
இது எங்களின் அடிப்படை உரிமை. 29 வருடங்களாக எங்கள் மூத்தவர்களும் பெற்றோர்களும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருகிறார்கள். வீட்டிலும் நாள் முழுவதும், நாங்கள் ஹிஜாப் அணிகிறோம். திடீரென அதை அகற்றிவிட்டு (தொடர்பில்லாத) சிறுவர்கள் முன் எப்படி உட்கார முடியும்?” என்கிறார் இந்தக் கல்லூரி மாணவி தெஹ்ரின் பேகம்.
மேலும் அவர் கூறுகையில், நானும் எனது உறவினர் ஆயிஷா ஷாஹீனும் தனியார் கல்லூரிகளில் சேர வழியில்லாததால் எங்கள் பெற்றோர் அரசுக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தனர். ஹிஜாப் தடை அவர்களின் கனவுகளை தகர்ந்துவிட்டது என்றார்.
“நான் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். என்னுடைய சகோதரியும் கல்லூரிக்குச் செல்கிறார். அங்கே கற்பிப்பது நன்றாக இருக்கிறது. நான் எம்பிஏ படித்து ஏதாவது ஆக வேண்டும்” என்கிறார் குந்தாபுரா அரசு பியூ கல்லூரி மாணவி ஆயிஷா ஷாஹீன்.
ஹன்சிநாமத் என்ற மாணவி கூறுகையில், பலரை நண்பர்களாக ஏற்கும் போது மதத்தைப் பார்த்ததில்லை, ஆனால் இப்போது இந்தப் பிரச்சனையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. இது சில விஷயங்களை மாற்றும் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நாங்கள் அவர்களை எதிர்ப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் ஒழுக்கம் மற்றும் சமத்துவத்தை மட்டுமே கேட்கிறோம் என்கிறார்.
உடுப்பியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் ரஷ்மிதா ஷெட்டி, கூறுகையில், சமீப காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை தானும் தனது முஸ்லிம் நண்பர்களும் திகிலுடன் பார்த்ததாகக் கூறுகிறார்.
பல முஸ்லிம் மாணவர்கள் எங்களது கல்லூரியில் படிக்கின்றனர். ஹிஜாப்புக்கு எதிராக இந்து மாணவர்கள் முன்பு எந்த எதிர்ப்பையும் காட்டியதில்லை. தற்போது நிலைமை மாறிவிட்டது.
“ஒரு பெண் ஹிஜாப் அணிந்திருந்தாளா இல்லையா என்பதை நாங்கள் கவனித்ததே இல்லை. சில சமயங்களில் வெப்பம் அதிகமாக இருந்தால் அதை அகற்றிவிடுவார்கள். இது ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை”
இந்தப் பிரச்சனை முஸ்லிம் நண்பர்கள் மனதில் நிலைத்து நிற்கும். இவ்வளவு சிறிய வயதில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. இப்போது அவர்கள் வேறு விதமாகப் பார்க்கப்படுவார்கள்.
எனது முஸ்லிம் நண்பர்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று கருதுவதால் நான் ஆதரவளிக்கிறேன். முஸ்லிம் பெண்களுடன் சேர்ந்து ஏன் முழக்கங்களை எழுப்பவில்லை என்பது என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் அதை எப்படி செய்வது? இது ஒரு இக்கட்டான நிலை. “நான் அமைதியாக இருந்து என் நண்பர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். அதுவே எனது எதிர்ப்பு.” என்றார்.
இதற்கிடையில் ஒரு பாஜக தலைவர் முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிய விரும்பினால் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்,
-தி க்விண்ட், பிபிசி தகவல்களிலிருந்து
செளமி