ஜஜ்பூர், (ஒரிசா), மார்ச் 20- ஒரிசாவில் குளிக்கச் சென்ற இடத்தில் நீரில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்றச் சென்ற ஆறு பேர் உயிரிழந்தனர். ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் கரஸ்ரோட்டா ஆற்றில் ஹோலி பண்டிகையை கொண்டாடி விட்டு குளிப்பதற்காக நண்பர்கள் சிலர் ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்றொருவர் அவரைக் காப்பாற்ற சென்றிருக்கிறார். ஆனால் அவரும் நீருக்குள் மூழ்கி உள்ளார். இதுபோன்று தங்களுடைய நண்பர்களை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து ஆறு பேர் சென்று அவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர்வாசிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலர் ஆற்றில் நீந்திச் சென்று, ஒருவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் பற்றி ஒடிசா தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் அதிரடி விரைவு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், மூன்று உடல்களை அவர்கள் மீட்டனர். மற்ற மூன்று பேரை தேடும் பணி நடந்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அதிகாரி பூர்ண சந்திர மராண்டி கூறியுள்ளார்.