tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள்  கண்ணில் கருப்புத் துணி கட்டி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 12-  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில், கண்ணில் கருப்பு துணி கட்டி, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். கோட்டத் துணைத் தலைவர்கள் மலர்மன்னன், கோவிந்தராஜன், கோட்ட இணைச் செயலாளர் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனைவர் பால்பாண்டி துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி திருச்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.  முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டப் பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.  பெரம்பலூர்  பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். கோட்ட துணைத் தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். அனைத்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை குறித்து கோட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாநில இணைச் செயலாளர் இளையராஜா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் நிறைவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் மணிவேல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி, கண்ணில் கருப்புத் துணி கட்டி கருப்புக் கொடி ஏந்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  கரூர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கண்ணில் கருப்பு துணியை கட்டி, கருப்புக்கொடியை கையில் ஏந்தி, நெடுஞ்சாலைத்துறை கரூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், மாவட்ட தலைவர் எம்.எஸ். அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் ஆர். சிவக்குமார் நன்றி கூறினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.