tamilnadu

‘தோழி விடுதி’க்கு எதிராக வழக்கு மாணவருக்கு உயர்நீதிமன்றம் ரூ. 10 ஆயிரம் அபராதம்!

‘தோழி விடுதி’க்கு எதிராக வழக்கு மாணவருக்கு உயர்நீதிமன்றம் ரூ. 10 ஆயிரம் அபராதம்!

சென்னை, அக். 23 -  பணிபுரியும் மகளிருக்காக குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ‘தோழி விடுதி’களை தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி என 9 நகரங்களில் இந்த விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் பின்புறம் மாணவிகள் விடுதி அமைந்துள்ள இடத்திலும், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி, பல்கலைக் கழக முதுகலை மாணவர் நவீன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விடுதி கட்டுமானப் பணி காரணமாக  மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விடுதி கட்டும் பணியை கைவிடக் கோரி மனு அளித்ததாகவும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, இதுபோன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வதை கைவிட்டு சம்பந்தப்பட்ட மாணவர், படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.