tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னை மாநகர் சாலைகள் சீரமைப்பு பணி: வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த சிபிஎம் ஆலோசனை

சென்னை,ஜன.12- சென்னை மாநகரில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநில அரசு வெளிப்படை தன்மை யுடன் செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி சில ஆலோசனைகளை முன் வைத்துள்ளது. இதுகுறித்து மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா  விடுத்திருக்கும் அறிக்கை வரு மாறு:- சென்னை மாநகரில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலை களை சுமார் ரூ.213 கோடி செலவில்  புதுப்பிக்க தமிழ்நாடு அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் புதிதாக போடப்படும் சாலை களின் தரம் குறித்தும், ஒப்பந்தக் காரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு பழைய சாலைகளை அகழ்ந்தெடுக் கப்பட்டு அமைக்க வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சாலைகள்  போடுவதற்காக மின்னனு மூலம்  ஒப்பந்தம் (இ-டெண்டர்) கோரப்பட்டு ள்ளது. அரசின் இணையதளத்திலும் ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய விதிமுறைகள் முறையாக பகிரப்பட் டுள்ளது. ஆனால், இவை அனைத் தும் ஆங்கிலத்தில் தான் உள்ளது.  கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டில் சென்னை மாநகரில் 1872 சாலைகள் சுமார் 355 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டன. இந்த சாலைகளை அமைப்ப தற்கு ஒப்பந்தக்காரர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள், வழிவகைகள் எதுவும் தற்போது  அரசின் இணையதளத்தில் இல்லை. மேலும் ஒப்பந்தம் எடுக்கப்பட்டபிறகு விதிமுறைகள் அனைத்தும் அரசின் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. சாலைகளின் தரம், உறுதித் தன்மை, குறிப்பாக மக்கள் நலன் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு பல்வேறு விதிமுறைகளையும், வழி காட்டுதல்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட குழு  4 கோரிக் கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறது.  தனியார் ஒப்பந்தக்காரர்கள் மூலம் சாலைகள் அமைப்பதற்கும் மாறாக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலமாக சாலை அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும். தனியார் ஒப்பந்தக்காரர்கள் கோரியுள்ள இ-டெண்டர் அனைத்தும் இணையத்தில் தமிழில் வெளியிட ப்பட வேண்டும். ஒப்பந்தக் காரர் எந்தெந்த விதிமுறைக ளுக்கு உட்பட்டு சாலைகளை அமைப்பதற்கு ஒப்புக்கொள்கிறாரோ அந்த விதிமுறைகள் அனைத்தும் இணையத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும். சாலைகள் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்படும் இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் ஒப்புக்கொண்ட விதிமுறைகள் மற்றும் ஒப்பந்த தொகைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் ‘பங்க்’கில் இலவச  கண் பரிசோதனை முகாம்

செங்கல்பட்டு, ஜன. 12- இந்தியன் ஆயில் வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு ஜிஎஸ்டி  சாலை கொளப்பாக்கம் கற்பக விநாயகா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள கோகோ மதுராந்தகம் பெட்ரோல் ‘பங்க்’கில் இலவச சிறப்பு  கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கோகோ மதுராந்தகம் சூப்பர்வைசர் கன்னியப்பன்  துவக்கி வைத்தார். அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஐ கேர் ஆப்டிகல்ஸ், செங்கல்பட்டு மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது இந்த பெட்ரோல் ‘பங்க்’கில் லாரி ஓட்டுநர்களுக்கு இலவச  பார்க்கிங், தங்கும் அறை, பாத்ரூம் வசதிகள் அளிக்கப்படுகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் ஹேர் கட்டிங், சலவை போன்ற வசதிகள் செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர் தினத்தையொட்டி பெட்ரோல் ‘பங்க்’க்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.

குன்றத்தூர், மாங்காடு நகராட்சியில் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல்

 காஞ்சிபுரம், ஜன.12 - காஞ்சிபுரம் மாவட்ட த்தில் தரம் உயர்த்தப்பட்ட குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக புகைப் படத்துடன் கூடிய வாக்கா ளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா. ஆர்த்தி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து  கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில் வெளி யிட்டார். அதனை நகராட்சி ஆணையாளர்கள் ந.தாமோ தரன் மற்றும் ஆர்.சுமா  ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர். குன்றத்தூர் நகராட்சி யில் உள்ள 30 வார்டுகளில் 53 வாக்குச் சாவடிகளும், மாங்காடு நகராட்சியின் 27 வார்டுகளில் 44 வாக்குச் சாவடிகள் என ஆக மொத்தம் 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 34 ஆண்  வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளும், 34 பெண்  வாக்காளர்கள் வாக்குச்சாவ டிகள், 29 அனைத்து வாக்கா ளர்கள் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி வாக்குச் சாவ டிகளில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்படி வாக்குச்சாவடி களில் 39,606 ஆண் வாக்கா ளர்களும், 40,753 பெண் வாக்காளர்களும், 21 இதர  வாக்காளர்களும், ஆக  மொத்தம் 80,380 வாக்காளர் கள் உள்ளனர். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்கா ளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிட மிருந்து பெறப்பட்டு, மாற்றங்கள் மேற்கொள் ளப்படும். ஏறத்தாழ 415 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்திற்கு சென்னையில் புதிய வளாகம் திறப்பு 

 சென்னை,ஜன.12- சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் 70,000 சதுர அடி பரப்பில் செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்துக்கு புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் தரமணியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை புதனன்று  பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய நிறுவனம் முதுகலை, முனைவர், முனைவர் பட்ட மேலாய்வு உள்ளிட்டவற்றில் செம்மொழித் தமிழ் கற்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களை பதிப்பித்து வெளியிடும், பழந்தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் செழுமை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், மின்னனு நூலகம், இலக்கியம், மொழியியல், மொழிபெயர்ப்பு, அகராதியியல், நாணயவியல் உள்ளிட்ட 12 புலங்களுடன் புதிய கட்டிடம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக், டயர் எரிப்பு:  மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை,ஜன.12- பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும், பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவது தான் வழக்கம். தற்போதிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனையில், போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் போகிப்பண்டிகையை யொட்டி விதிகளை மீறி பிளாஸ்டிக், நெகிழி, டயர்களை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம்  தெரிவித்துள்ளது. மேலும்  அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி

சூளகிரி, ஜன. 12- கிருஷ்ணகிரி மாவட்டம் சூள கிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ள ராம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் முட்டைகோஸ் பயிர் செய்துள்ளார். இவர் தோட்டத்தில் உள்ள பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், காட்டு பன்றிகள் வராமல் தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் புதனன்று பக்கத்து தோட்டத்தை சேர்ந்த முனிராஜ் (38) என்பவர் தனது தோட்டத்திற்கு செல்லும் போது, மின்வேலியில் சிக்கி படுகாயமடைந்தார்.  உடனே அக்கம் பக்கத்தினர் முனி ராஜை மீட்டு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி காவல்துறை யினர் முனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நவ்லாக் பண்ணை தொழிலாளர்கள் கைது: விவசாயிகள் சங்கம் கண்டனம்

ராணிப்பேட்டை, ஜன. 12 - ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் விவசாயப் பண்ணையில் 50 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 4 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரியும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த கடந்த 2021 முதல் வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி உயர்வு, பொங்கல் போனஸ் வழங்கக் கோரியும் வேளாண் அதிகாரிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், தொழிலாளர்கள் கடந்த திங்களன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, சிபிஎம் மாவட்ட அமைப்புக்குழு கன்வீனர் என்.காசிநாதன் தலைமையில் மனு அளிக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதால் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சங்க நிர்வாகிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி அன்றே 4 மாத நிலுவை ஊதியம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் வாக்குறுதி அளித்தபடி ஊதியம் வழங்காததால் புதனன்று (ஜன. 12) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகிய தொழிலாளர்களை,  பெருந்தொற்று காலத்தில் கூட்டம் கூடியதாகக் கூறி பொங்கல் பண்டிகை என்றும் பாராமல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் கைது செய்தவர்களை விடுவித்து, அவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.