நெய்யாற்றின்கரை, ஜன.2 - கேரள மாநில கூட்டுறவு சங்க நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் நெய்யார்டாமில் செயல்பட்டுவரும் கேரள கூட்டுறவு கல்வி நிறு வனம் (கிக்மா), கிக்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சிறந்த கல்விச் சேவையை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களாகும். அரசுத் துறையின் எம்.பி.ஏ.நிறுவனங்களில் நீண்டகாலமாக தேசிய அளவில் 6வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் கேரளாவின் கிக்மா தொழில்கல்வி நிறுவனங்கள் தக்கவைத்து வருகின்றன. கேரள மாநில கூட்டுறவு சங்கத்தில் நீண்டகாலம் தலைவராக செயல்பட்டு வந்தவரும் நெய்யாற்றின்கரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பரமேசுவரன் பிள்ளை இந்நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார்.
தொழிலாளர் தலைவர், சிறந்த செயற்பாட்டாளர் என பலதுறைகளில் தனித்துவத்துடன் செயல்பட்டவர் ஆர்.பரமேசுவரன் பிள்ளை. அவரது நினைவைப் போற்றும் வகையில் கிக்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெயரை ஆர்.பரமேசுவரன் நினைவு கலை மற்றும் அறி வியல் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநிலக் கூட்டுறவு சங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை கேரள பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2023 ஜனவரி 7 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கிக்மா வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிடுகிறார். நிகழ்ச்சிக்கு கூட்டுறவு, பத்திரப்பதிவு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் வி.என்.வாஸவன் தலைமை வகிக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் சி.கே.ஹரீந்திரன், ஐ.பி.சதீஷ், ஜி.ஸ்டீபன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல், சமூக செயற்பாட்டா ளர்கள், அதிகாரிகள் முதலானோர் பங்கேற்கிறார்கள்.