சென்னை, ஜன. 2 - தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 3 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.25ந் தேதி தொடங்கியது. குறிப்பாக, நவ.1ந் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சராசரி அளவான 446 மி.மீட்டரை காட்டிலும் கூடுதலாக 704 மி.மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த கால கட்டத்தில் மட்டும் 58 விழுக்காடு கூடுதலாக மழை பெய்தது. இதன்காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் பெரும்பாலானவை முழு கொள்ளளவை எட்டி யது; நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு செய்தது. அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 6.04 மீட்டரும், குறைந்த பட்சமாக காஞ்சிபுரத்தில் 0.21 மீட்டரும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் தஞ்சை மற்றும் நாகை மாவட்டத்தில் 0.02 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நீர்மட்டம் உயரவோ, குறையவோ இல்லை. இந்த 3 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.