புதுச்சேரி,டிச.12- கொரோனாவை பரவலை தடுக்க 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 2-வது தவணை உட்பட 13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை வீடு, வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி கட்டாய தடுப்பூசி செலுத்தும் சட்டமும் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் பொதுமக்களிடம் தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா? என ஆய்வு செய்யப்படவில்லை. தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஆளுநர் தமிழிசை புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இதனால் தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வில்லியனுவரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் கலந்துரையாடினார். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர்,“ ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் மருத்துவர்களும், செவிலியர்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை புதுவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இனிமேல், தடுப்பூசி போட்டவர்களுக்கான ஆவணங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படலாம். எனவே புதுவை மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்களோடு வைத்திருக்க வேண்டும்” என்றார்.