மதுரை:
அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும் என 7.5சதவீத உள் ஒதுக்கீடு கோரும் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக வியாழனன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஐந்து அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர். தலைமைச் செயலருடன் ஐந்து அமைச்சர்களும் அனைத்துக் கோணங்களிலும் ஆலோசித்துள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவைப்படுகிறது” எனத் தெரிவித்தார்.அதற்கு நீதிபதிகள், “சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் பல கட்ட ஆலோசனை,யோசனைகளுக்குப் பிறகே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பலகோணங்களில் ஆலோசிக்க மேலும் அவகாசம்தேவையா? நமது நாட்டில், சமூக வலை தளங்களில் கருத்துச் சுதந்திரம் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை.
நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைத் தளங்களில் தகவல் பகிரப்படுகிறது. அது தொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அது போல கருத்து தெரிவிப்பவர் களுக்கு நீதிமன்றம் கண்டம் தெரிவிக்கிறது.மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட சூழலில் விரைவாக முடிவெடுக்க வேண்டும். இது போல சூழல்கள் எழாது எனும் நம்பிக்கையின் காரணமாகவே ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கவோ, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், “இது போன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு பதிலளிக்கவேண்டிய தேவை இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க போதுமான அளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.அதற்கு நீதிபதிகள்,” சூழல், அவசரம், அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ இயலாது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனால் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வது அவசியமானது என நீதிமன்றம் கருதுகிறது. நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும். பிற மாநிலங்களில் நீட் முடிவு வெளியான பின்னர் என்ன நிலை உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர்.மனுதாரர் தரப்பில்,”கர்நாடகாவில் மாநிலங்களில் இது போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.அதை உறுதி செய்து தகவல் தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வியாழன் பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
மாலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கர்நாடக மாநிலத்தில் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமேஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடுவழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது என்றார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கர்நாடக மாநிலத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 15 சதவீதமும் கன்னட மொழியில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்து சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது குறுகக்கிட்ட நீதிபதிகள், “நீதிபதி கலையரசன் ஆய்வறிக்கையில் அரசு மாண வர்கள் வேலை செய்துகொண்டே படித்து வருகின்றனர் என்பது தெரியவருகிறது இதனை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும் அப்போது தான் உள் ஒதுக்கீடு தொடர்பாக தவறான கருத்துக்கள் வெளியிடுபவர்களுக்கு உண்மை நிலை புரியும் அரசியல் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரண்டு மாதங்களுக்கு முன்பே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 16-ஆம் தேதி முடிவுகள் வெளியாகி தற்போது வரை கலந்தாய்வுகள் நடைபெறாமல் உள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை மொத்ம் 14 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனக் கூறிய நீதிபதிகள், “இந்த வருடம் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு பெற்றுள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்”அரசுத் தரப்பில் 400 முதல் 500 மாணவர்கள் இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீடு இந்த வருடமே அமல்படுத்தப்பட்டால் 200 முதல் 300 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது.சட்ட விதி 361- இன் படி ஆளுநருக்கு உத்திரவிடவோ, கேள்வி எழுப்பவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை ஆனால் சட்ட விதி 200- இன் படி ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பின் கனவை மனதில்கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.அரசமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் பதில் அளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் என்னும் நம்பிக்கை காரணமாகவே இது போல் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு குறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு எட்டப்படும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் கூறி நவம்பர் 2-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.