tamilnadu

img

‘பாஜக அலுவலகமாக ஆளுநர் மாளிகை’

தருமபுரி, நவ.23- தமிழக ஆளுநர் பாஜக-வின் பிரதிநிதியாகவும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போலவும் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “ஒன்றிய பாஜக அரசு எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு  சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மத்தியப்  பிரதேசம், கோவா போன்ற  காங்கிரஸ் அரசை கவிழ்த்தார்கள். மகாராஷ்டிராவிலும் ஆட்சியை கவிழ்த்த பாஜக, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை பணியாகவே செய்துவரு கின்றனர்” என்று சாடினார். மேலும் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர் மூலம் ஆட்சியை சீர்குலைத்து வருகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்  போல் இல்லாமல்,  பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுகிறது. போட்டி அரசாங்கம் நடத்துவது போல் ஆளுநர் அறிக்கைவிடுக்கிறார். திருக்குறள் ஒரு ஆன்மீக நூல் என்று அபத்தமாகப் பேசுகிறார். காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய அரசு செலவு செய்கிறது. இதன் மூலம்  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்  சித்தாந்தத்தை வளர்த்தெடுக்க  ஒன்றிய அரசு செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, உலகத்திலேயே சிறந்த மொழி தமிழ் என பேசியிருக்கிறார். ஆனால்  22 மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுக்கவேண்டும் என அரசியல்  சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் இந்திக்கும், சமஸ்கிருதத்துக்கும் மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்த மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் 10 ல் ஒரு சதவிகிதம் கூட தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி  ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதேபோன்று தான் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்வதாகக் கூறி, போட்டி அரசாங்கம் நடத்துகிறார். ஆளுநரின் அடாவடிகளைக் கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பப்பெற வேண்டுமென சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநரின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கை யை ஒன்றிய அரசு கைவிடவேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். இந்த சந்திப்பின் போது, கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர். ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.