சென்னை, டிச. 22- நகைக் கடன் ஆய்வுப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு கெடு விதித்திருக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடந்த செப்டம்பரில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றதாகவும், வங்கி அதிகாரிகளின் துணையோடு சிலர் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கூட்டுறவு சங்க நகைக் கடன்களை ஆய்வு செய்யும் பணிகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடையாமல் இருந்து வந்தது. இருப்பினும், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகைக் கடன் தள்ளுபடியை அமல்படுத்த அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக நகைக் கடன் ஆய்வுப் பணிகளை அடுத்த 10 நாட்களில் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அரசு கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக பொங்கலுக்குள் நகைக் கடன்கள் தள்ளுபடி அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கடன் தள்ளுபடி குறித்த ரசீதும், நகைகளும் பயனாளிகளுக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளது அரசு.