பெண்கள் வேலைக்குச் செல்வது இன்று இயல்பாக ஏற்கப்பட்டு விட்டாலும், சில சமயத் தலைவர்களும், சாக்கடைகளும் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமில்லாதவர்கள் என்பதாகப் பேசும் சூழ்நிலையையும், அதை அந்தச் சம யத்தின் பெண்களே முழுமனதுடன் எதிர்க்காத வேதனையையும் பார்க்கத்தான் முடிகிறது. பெண்களுக்கான வேலை என்றால், ‘டீச்சரம்மா’, ‘நர்சம்மா’ போன்றவையே எனக் கருதப்பட்ட நிலை மாறினாலும்கூட, அலுவலக எழுத்தர்களாகவோ, ஐடி துறை யில் அலுவலகத்திற்குள் பணியாற்றுபவர் களாகவோ ஏற்றுக்கொள்கிற அளவுக்குப் பெண்களை லாரி ஓட்டுநராக நம்மில் பலரால் ஏற்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பேருந்து அல்லது ஆட்டோ ஓட்டுநராகவே பெண்களை இயல்பாகப் பார்க்க முடியாத நிலையில், விமானியாக ஆவதென்ப தெல்லாம் பெரிய கனவுதான்! இன்றும்கூட, நளினமாகச் சேவை செய்யும் விமானப் பணிப் பெண்ணாக ஏற்குமளவுக்கு பெண்களை விமானியாக இயல்பாக ஏற்க முடியாத நிலையிருக்கிறது என்பதை மறுப்பதற் கில்லை. ஆனால், 99 ஆண்டுகளுக்கு முன்பே விமானியாக உரிமம் பெற்று, அத்துடன் நில்லாமல் பெண்களை விமானிகளாக்கு வதற்காகவே ஓர் அமைப்பையும் உருவாக்கி னார் ஒரு பெண் என்பதும், அவ்வமைப்பு இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் விமானிகளையும் உருவாக்கி, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதும் வியப்புக் குரியவைதானே? அவர்தான் அமேலியா ஏர்ஹார்ட்! மரத்தில் ஏறி விளையாடுவது தொடங்கி, தனக்கென ரோலர் கோஸ்ட்டர் போன்ற சறுக்கு விளையாட்டைச் செய்து, உடைகள் கிழிய விழுந்து அடிபட்டுக்கொண்டதுவரை குறும்புக்காரச் சிறுமியாக இருந்தாலும், 10 வயதில் பறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, இன்றைய வடிவத்தை எட்டியிராத அன்றைய விமானத்தில் பறக்கவே மறுத்த வர்தான் அமேலியா. ஆனால், அவரது 23 வயதில்(1920இல்) முதல் பறக்கும் அனுபவத்தைப் பெற்றார். அவர் தந்தையார் 10 டாலர் செலவில்(இன்றைய இந்திய மதிப்பில் ரூ.11 ஆயிரத்துக்கும் அதிகம்!) செலவிட்டு ஏற்பாடு செய்த அந்த 10 நிமிட பறக்கும் அனுபவம், விமானத்தைத் தானே ஓட்ட வேண்டும் என்று அமேலி யாவை முடிவெடுக்கச் செய்தது.
அடுத்த வாரத்தில் விமானியாவதற்கான பயிற்சியில் சேர்ந்துவிட்டார் அமேலியா! அந்தப் பயிற்சிக்குச் செலவான 1000 டாலர்கள் (இன்று சுமார் ரூ.11.23 லட்சம்!) அவரே சேமித்தது! பேருந்தில் பயணித்து, அதன்பின் பயிற்சி நடைபெறும் இடத்தை அடைய 6 கி.மீ. நடக்கவேண்டும். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு நாளைக்கு 12 கி.மீ. நடந்தார் அமேலியா! அவர் தாய் மேலும் 1000 டாலர்கள் தர, தந்தையின் உதவியுடன் ஒரு பழைய இரட்டை இறக்கை விமானத்தையே வாங்கிவிட்டார். 1923 மே-யில் விமானிக்கான உரிமத்தைப் பெறுவதற்குமுன்பே, 1922 அக்டோபரில் அவர் பறந்த 14 ஆயிரம் அடி உயரம் என்பது, பெண் விமானி பறந்த மிக அதிக உயரம் என்று உலக சாதனையாகியது! அவருக்கு முன்பே, அமெரிக்காவில் மட்டுமே 15 பெண்கள் விமானி உரிமம் பெற்றி ருந்தனர். அவர்கள்தவிர ஐரோப்பாவிலும் பெண்கள் விமானிகளாகியிருந்தனர். அதனால், இவர் ஒன்றும் முதல் விமானி அல்ல... ஆனால், அட்லாண்டிக் கடலைத் தனியாகப் பறந்து கடந்த முதல் பெண் விமானி, 14 ஆயிரம் அடி உயரத்திற்குமேல் பறந்த முதல் பெண் விமானி, 100 கி.மீ. வேகத்துக்குமேல் பறந்த முதல் பெண் விமானி, ஆட்டோகைரோ வகை விமானத்தில் பறந்த முதல் பெண் விமானி, ஆட்டோகை ரோவில் 18,415 அடி உயரம் பறந்து சாதனை படைத்த முதல் மனிதர், கண்டங்கடந்த பறத்த லில் வேகச் சாதனை என்று ஏராளமான சாதனைகளைப் படைத்தார் அமேலியா! அவரது சாதனைகளைப் பாராட்டி அமெரிக்க ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேன்மைமிகு பறக்கும் சிலுவை விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான்.
1929இல் அமெரிக்காவின் க்ளீவ்லாந்தில், பெண்களுக்கான விமானப் பந்தயம் நடத்தப் பட்டது. அதில் பங்கேற்ற சில பெண் விமானி களுடன் இணைந்து, பெண்கள் விமானியா வதில் துணைபுரியும் ஓர் அமைப்பை உரு வாக்கினார் அமேலியா. உறுப்பினர்களின் எண்ணிக்கையையே அவ்வமைப்பிற்குப் பெயராக வைக்கலாம் என்ற அமேலியா வின் பரிந்துரையின்படி, பெயரிடப்பட்டு, 99கள் (நைண்ட்டி நைன்ஸ்) என்ற பெயர் நிரந்தரமாக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக 1931-33 காலத்தில் அமேலியா செயல்பட்டார். பெண்கள் விமானியாவதற்கு வழிகாட்டுதல்கள், உதவித்தொகை வாய்ப்புகள் என்று பல்வேறு உதவிகளைச் செய்கிற இந்த அமைப்பு, இன்று பல்வேறு நாடுகளில் 155 கிளைகளைக் கொண் டுள்ளது. ஆயிரக்கணக்கான பெண்களை விமானிகளாக்கிய இந்த அமைப்பில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் விமானிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
முதன்முறை பயணியாக அட்லாண்டிக் கடலைக் கடந்த விமானப் பயணத்தின் குறிப்புகளை 20 மணி 40 நிமிடங்கள் என்ற நூலாக அமேலியா எழுத, அது மிகப்பெரிய வெற்றிபெற்றது. பின்னர், விமானியாகத் தன் அனுபவங்களை ‘தி ஃபன் ஆஃப் இட்’ என்ற பெயரில் வெளியிட்டார். இது பெண்களை விமானியாக ஊக்குவிக்கும் நூலாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பெண்களை விமானிகளாக்குவதில் அமேலியா எவ்வளவு பெரிய தூண்டு கோலாக இருந்தார் என்பதற்கான சிறந்த உதா ரணம், அவருடன் பறந்த பின், எலினார் ரூஸ்வெல்ட் (குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்டின் மனைவி), விமானப் பயிற்சி யில் சேர்ந்தார் என்பதுதான். அவரால் அப் பயிற்சியை நிறைவு செய்ய முடியவில்லை என்றாலும்கூட, அவ ருக்கே அந்த ஆர்வம் அமே லியாவால் ஏற்பட்டது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி. மிகவும் புகழ்பெற்று விளங்கிய அமேலி யாவை, பெண்கள் இதழான காஸ்மோ பொலிட்டன், துணையா சிரியராக நியமித்தது. அந்த வாய்ப்பையும், அப்போது விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கு இருந்த தயக்கங்களை உடைப்பதற்கும், பெண்கள் விமானியாக ஊக்கப்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொண்டார் அமேலியா. மக்களை விமானப் பயணத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ததிலும் அவருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. பயணிகள் விமான நிறுவனங்களில் தன் சொந்த நிதியை முதலீடு செய்து, புதிய வழித்தடங் களில் விமானங்களை இயக்கச் செய்தார். நேஷனல் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
அத்தனையையும் தாண்டி, நெடுந் தொலைவு பயணங்களுக்கான விமானங் களின் திறனை நிரூபிப்பதற்கான துணிகரப் பயணங்களை மேற்கொள்வதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் அமேலியா. அட்லாண்டிக் பெருங்கடலை இடை நில்லாமல் பறந்து கடப்பது மிகுந்த ஆபத்தான பயணமாக இருந்த நிலையில், தனியாக அதைச் செய்த இரண்டாவது மனிதரும், முதல் பெண்ணுமானார் அமேலியா. அதற்காகவே அமெரிக்க ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேன்மைமிகு பறக்கும் சிலுவை விருது இவருக்கு வழங்கப்பட்டது. அத்தகைய ஆபத்தான நெடுந்தொலைவு பயணங்களைப் பலமுறை மேற்கொண்ட அவர், விமானத்தில் உலகைச் சுற்றிவரும் பயணத்தை 1937 மார்ச்சில் மேற்கொண்டார். அவரது மனதிற்கு இருந்த உறுதி விமானத்திற்கு இல்லாததால், விமானம் பழுதாகி, அந்தப் பயணம் தோல்வியில் முடிந்தது. அந்த அனுபவங்களும்கூட அமேலியாவால் எழுதப்பட்டு, செய்தித் தாள்களில் வெளியாகி, அவர் மறைவுக்குப் பின் ‘கடைசிப் பறத்தல்’(லாஸ்ட் ஃப்ளைட்) என்ற பெயரில் நூலாக வெளியாயின. ஃப்ரெட் நூனான் என்ற வழிகாட்டியுடன், 1937 ஜூன் 1இல் உலகைச் சுற்றிய பய ணத்தை மீண்டும் தொடங்கினார் அமேலியா. 46 ஆயிரம் கி.மீ. தொலைவுக்குத் திட்டமிடப்பட்டிருந்த பயணத்தில் 35 ஆயிரம் கி.மீ. கடந்துவிட்ட நிலையில், 1937 ஜூலை 2 அன்று, பசிஃபிக் பெருங்கடலில் ஹாவ்லண்ட் தீவுப்பகுதியில் பறக்கும்போது அமேலியாவின் விமானம் காணாமல் போனது. அமேலியாவைக் கண்டுபிடிக்க 40 லட்சம் டாலர் செலவு செய்து மாபெரும் தேடுதல் பணியை அமெரிக்க அரசு மேற்கொண்டது. இத்தொகை அக்காலத்தில் இத்தகைய பணிக்கு செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். அரசின் தேடுதல் பணி வெற்றியடையாமல் கைவிடப்பட்டபின்னும், அவர் கணவர் பெருந்தொகை செலவு செய்து தேடினார். கண்டுபிடிக்க முடியாத நிலையில் அமேலியா இறந்துவிட்டதாக 1939 ஜனவரி 5 அன்று அறிவிக்கப்பட்டது. 26 வயதில் விமானியாகி, 40 வயதில் மறைவதற்குள் அமேலியா சாதித்தவை ஏரா ளம். விமானப் பயணத்திற்கு மக்களையே துணிவூட்டித்தான் அழைக்க வேண்டியிருந்த காலத்தில், பெண்கள் விமானிகளாகவே ஆவதற்கு வழிகாட்டிய அமேலியாவிற்கு அருங் ங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், விருதுகள், நூல்கள் என்று கணக்கிலடங்கா கவுரவங்கள் அளிக்கப்பட்டுள்ளன!