tamilnadu

கோவை பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுக: சிபிஎம்

சென்னை, ஜன.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கோவை மாவட்டத்தில்  உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச் சரகம், கூமாட்டி கிராமத்தில் கடந்த புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில், அந்த வன கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை சில நபர்கள், மயக்க மருந்து கொடுத்து வனத்திற்குள் தூக்கிச்சென்று, பாலியல் சித்ரவதை செய்து, பின்னர்  சுமார் இரவு 7 மணியளவில்  சிறுமியின் வீட்டு முன்பு கண்கள் கட்டப்பட்ட நிலையில் குற்றுயிராக விட்டுச் சென்றிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவம் கூமாட்டி கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களிடத்திலும், மற்ற பழங்குடியின கிராம மக்களிடையேயும் பெரும் அச்சத்தையும், சொல்லொண்ணா கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூமாட்டி வனக்கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்குள் டாப்சிலிப்லிருந்து சுமார் 35 கிலோ மீட்டர், அதேபோல வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். பழங்குடி சிறுமி மீதான இந்த வன்கொடுமை, ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்தின் பாதுகாப்பை மிகவும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த வன்கொடுமையை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என கண்டறிந்து அனைவரையும் கைது செய்வதுடன், அவர்கள் மீது துரித விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், கோவை மாவட்ட காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்மருத்துவ சிகிச்சை  அளிப்பதுடன், அவரது குடும்பத்திற்கு நிவாரணமும் வழங்குவதோடு, பழங்குடியின பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.