tamilnadu

img

கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கிடும் மோசடியான வேலைவாய்ப்பு திட்டங்கள்

இந்தியப் பொருளாதாரம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி எவ்விதத்திலும் வேலைவாய்ப்பை அதிகரித்திடும் வகையில் இல்லை. நாட்டிலுள்ள வேலைகளில், 57.3 விழுக்காட்டினர் சுயமாக வேலை பார்ப்பவர்கள். 18.3 விழுக்காட்டினர் வீட்டுவேலை செய்பவர்கள். 45 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்.  2020 மார்ச் மாதத்தில் கொண்டுவரப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Production Linked Incentive Scheme), உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது. ஆயினும் மோடி அரசாங்கம் அளித்திட்ட அபரிமிதமான ஊக்கத்தொகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் காரணமாக இந்தியாவில் பட்டிய லிடப்பட்ட நிறுவனங்கள் 2023-24இல் 10.1 விழுக்காடு என்ற விகிதத்தில் மிகப்பெரியளவு நிகர லாபத்தை ஈட்டின. இது, 2007-08க்குப் பின்னர் மிகவும் அதிகமாகும்.  இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற பொருளாதார ஆய்வு அறிக்கையானது, அதிகரித்து வரும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, விவசாயம் அல்லாத துறைகளில் ஆண்டுதோறும் சராசரியாக 78.5 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு  கஜானாவை திறந்து விடல்

இந்தக் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பரபரப்பாகப் பேசப்பட்டதால், அதன்பின்னர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசாங்கம் தாக்கல் செய்திடும் பட்ஜெட்டானது வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தும் என்றும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஒருவர் நினைத்திருந்திருக்கலாம். ஆயினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், முறைசார் துறையில் (formal sector), வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறி, உண்மையில் வேலைவாய்ப்பை அளித்திடாமல் அதற்கு மாறாக, அரசின் கஜானாவை கார்ப்பரேட்டுகளுக்கு அகலத் திறந்துவிடும்விதத்திலேயே அமைந்திருக்கிறது. நிதியமைச்சர் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive) என்னும் திட்டங்கள் சிலவற்றை அறிவித்திருக்கிறார். இவை கார்ப்பரேட் நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஏ’, ’பி’ மற்றும் ’சி’ என்று மூன்று திட்டங்கள். இதில் ‘ஏ’ திட்டம் அனைத்து முதலாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், ‘பி’ மற்றும் ’சி’ என்பவை ஒருசில இனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  ‘ஏ’ திட்டத்தின் கீழ், ஒரு முதலாளி ஊழியர் வைப்பு நிதி அமைப்பில் பட்டியலிடப்படாத ஒரு தொழிலாளியை ஊழியர் வைப்பு நிதி அமைப்பில் சேர்த்தால், பின் அந்தத் தொழிலாளிக்கு ஒரு மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் வரை மூன்று தவணைகளில் அரசாங்கம் அளித்திடும். இதன் பொருள், இவ்வாறு ஒரு தொழிலாளியை வேலைக்கு  அமர்த்திடும் முதலாளிக்கு, அந்தத் தொழிலாளிக்கு ஓராண்டுக்கு அளித்திடும் ஊதியத்தில் 12இல் ஒரு பாகத்தை  அரசாங்கமே மானியமாக நேரடியாக வழங்கும் என்பதாகும்.

மக்களின் பணத்தை  முதலாளிக்கு வழங்குவது

 உற்பத்தித் துறையில் உள்ள முதலாளிகள் (Employers in manufacturing), ஊழியர் வைப்புநிதி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 50 பேரை பணியமர்த்தினால், அந்த முதலாளி, ‘பி’ திட்டத்தின்கீழ் தகுதி படைத்தவராகிறார். அவருக்கு இந்தத் திட்டத்தின்கீழ் அரசாங்கம் ஊழியர் வைப்பு நிதிக்கு ஊழியர் அளிக்க வேண்டிய பங்குத் தொகையையும் அதேபோன்று முதலாளி  அளிக்க வேண்டிய பங்குத் தொகையையும் கணக்கிட்டு, அதில் ஊதியத்தில் 24 விழுக்காடு அளவுத் தொகையை நேரடியாக மக்களின் பணத்திலிருந்து அளித்திடும்.

32 விழுக்காடு வரை மானியம்

‘சி’ திட்டத்தின்கீழ், 2 முதல் 5 புதிய ஊழியர்களை நியமித்திடும் எந்தவொரு நிறுவனமும் ஊழியர் வைப்பு நிதி அமைப்பிற்கான முதலாளிகள் அளிக்கவேண்டிய பங்குத்தொகையில் மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஒவ்வொரு ஊழியருக்காகவும் பெற்றிடும். நிச்சயமாக அரசின் கஜானாவிலிருந்து 32.33 விழுக்காடு வரை மானியமாக அரசு வழங்கிடும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்தத் திட்டங்களில் உள்ள மிகவும் தீங்கு ஏற்படுத்தும் உண்மை என்னவெனில், இந்தத் திட்டங்களை அமல்படுத்து வதற்காக நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஊழியர்களை நியமித்திட வேண்டும். அதாவது முதல்  ஆண்டில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் தங்கள் ஓராண்டுப்  பணியை முடித்தபிறகு நிரந்தரமாக வெளியேற்றப்படு வார்கள். மேலும் இந்தத் திட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் மானியத்தைப் பெறுவதற்காக ஆட்குறைப்பையும் தூண்டும். மற்றொரு அடி   மற்றொரு அடியானது, பெரும் நிறுவனங்கள் பயிற்சி பெறுபவர்களையே பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதித்திடும் பயிற்சிக் கொள்கை (internship policy)யாகும். இதன்படி அரசாங்கம், அதிக லாபம் ஈட்டும் முதல் 500 நிறுவனங்கள், தங்கள் முழு உற்பத்தி மற்றும் சேவைகளை மேற்கொள்ள பயிற்சியாளர்களை (interns)/பழகுநர்களைப் (apprentices) பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருப்பதாகும். மாதாந்திர உதவித்தொகையான ரூ. 5,000 மற்றும் ஒருமுறை உதவியாக ரூ. 6,000 ஆகியவற்றை அரசாங்கம் ஏற்கும். மீதமுள்ள பயிற்சி செலவை நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (Corporate Social Responsibility Fund) எடுத்துக்கொள்ள முடியும்.

மோசடித் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு குறைந்திடும்  

கார்ப்பரேட்டுகள் ஆதரவு அரசாங்கமான இது, இந்த மோசடியான திட்டத்தின் மூலமாக, வேலைவாய்ப்பு உறவை ஒரு பலவீனமான திசையை நோக்கித் தள்ளி இருக்கிறது.  இதன் விளைவாக ஒவ்வோராண்டும் புதிய தொழிலாளர்கள் ஆட்டோமேஷன்  மற்றும் தொழில்நுட்பத்தின் அதிநவீன அறிவை விரைவாகக் கற்கும் நிலைக்குத்  தள்ளப்படுவார்கள். ஓராண்டுக்குப்பின் அவர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டுவிடுவார்கள். வேலையில்லா இளைஞர் பட்டாளம் அல்லது தொழிற்கல்வி படித்த இளைஞர்கள், ஒவ்வோராண்டும் தொழிற்சாலைகளின் வாயிற்கதவுகளின் முன் பழைய  தொகுதியினரை மாற்றுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இந்தத் திட்டங்களுக்காக பொதுக் கஜானாவிலிருந்து தனியாருக்குப் பணத்தை வாரி இறைப்பதால் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனைக்குக் கொஞ்சம்கூட தீர்வு காண முடியாது.   

கார்ப்பரேட்டுகளின் கருணைக்காக  இளைஞரை தள்ளிவிடும் அரசு

இந்தத் திட்டங்கள் அனைத்துமே கார்ப்பரேட்டுகளின் தயவில் வேலையில்லா இளைஞர்களைத் தள்ளிவிடும் மோடி அரசாங்கத்தின் திட்டமிட்ட முயற்சியாகும்.  மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவருவதால், ஒட்டுமொத்த தேவையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு அதன் காரணமாக நிகர விற்பனை குறைகிறது. இதன் காரணமாக உற்பத்தியை நோக்கி, தனியார் முதலீடு செய்வதற்கான மனநிலை பாதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வருமான வளர்ச்சி தொடர்ந்து ஊகத்தை நோக்கி செலுத்தப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்கலாம். ஆனாலும் இந்தத் திட்டங்களால் நாட்டின் பொருளாதார நிலையும், மக்களின் வாழ்நிலைமைகளும் மேலும் மோசம் அடையும் என்பதில் ஐயமில்லை.

ஜூலை 24, 2024, 
தமிழில்: ச.வீரமணி