பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி
அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
சென்னை, மே 5- தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்குப் பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள், 2020 ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின் தடை செய்யப்பட்டது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் உட்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, “பிஎஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறிழைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.