tamilnadu

img

மயிலாஞ்சி! - வரத.இராஜமாணிக்கம். பழநி

விரல் விரலாய்
கரம் தொட்டு கால் தொட்டு
சரம் சரமாய் ஓவியம்
வரையலானான்!

வாசம் சுமந்த நாசி சுளித்து
கூச்சத்தில் கொஞ்சமாக
அவள் குளிர்ந்து போனதில்
உருகிப் போனான்!

உதிராமல் உலர்வதற்கு
அவள் உறக்கம் கலையாமல்
புரள்வதற்கு..
இவன் செவிலித்தாயாக 
இனம் மாறி இரவு முழுக்க 
விழித்திருக்கலானான்!

விடியக் கருக்கலில்
பச்சைப் பக்ககற்றி
பார்த்த பிரசவத்தில்
ஜிவுஜிவு என
அவிழ்ந்த விரல்களை
அணுஅணுவாக
ஸ்பரிசிக்கலானான்!

செக்கச் சிவந்த பூவாய்
விரல்களில் சொரிந்த
மொழிகளை 
இருவரும் சேர்ந்து 
சீராய் சிரித்து பயின்றதில்
அவள் முகமெல்லாம்
மருதாணி!
இவன் அகமெல்லாம்
மயிலாஞ்சி!
வரத.இராஜமாணிக்கம். பழநி