tamilnadu

img

ஹவுஸ் ஆப் குக்ஸி - கி.ஜெயபாலன் புதுகை

“அண்ணன் என்னடா?
 தம்பி என்னடா?
 கணவனும் என்னடா? 
 கார்ப்பரேட் உலகத்திலே!!!”
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் “பணமா பாசமா” என்று படம் எடுத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.அதே கதைக்கருவைப்போல,இன்றைய நிதி மூலதன ஆதிக்க உலகில் ஒரு பெருநிறுவனக் குடும்ப உறவுகளை மையப்படுத்திப் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் “House of Gucci”. 2021-இல் வெளிவந்த உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சுயசரிதை வகைத் திரைப்படம்.
குச்ஸி ஒரு இத்தாலிய பன்னாட்டு நிறுவனம்.100சதவீதம் குடும்ப உறுப்பினர்களை மட்டும் இயக்குநர்களாகக் கொண்டு ஆடைகள் தயாரிக்கும் நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட நிறுவனம்.இது நவீன ஆடை வடிவமைப்புக்கு உலகப் பெயர்பெற்றது. 
“மொரீசியா குச்ஸி, ரொடால்ஃபோவின் ஒரே மகன். சிறுவயதில் தாயை இழந்தவன்.சட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறான். டொமினிகோ என்பவன் ரொடால்ஃபோவின் நம்பிக்கைக்குரிய மேனேஜர்.மேலும் ஆல்டோ குச்ஸியின் ஒரே மகன் பவுலோ. நவீன உடைகள் வடிவமைப்பதில் கெட்டிக்காரர். 
அமெரிக்காவில் உள்ள கிளையை ஆல்டோ குச்ஸியும்,இத்தாலி தலைமையகத்தை ரொடால்ஃபோ குச்ஸியும் நிர்வகிக்கிறார்கள். மிலனில் உள்ள லாஜிஸ்டிக் நிறுவன உரிமையாளரின் ஒரே மகள் பாட்ரீசியா.இவள் தந்தையுடன் இணைந்து நிறுவனத்தை நடத்துபவள்.முழுக்க,முழுக்க வணிகத்தில் கண்ணும் கருத்தும் கொண்டவள்.
இவள் மொரீசியா மீது காதல் கொள்கிறாள்.அந்தஸ்து அடிப்படையில் இவர்கள் காதலை ரொடால்ஃபோ  ஏற்கவில்லை. ஆனால் மொரீசியா,பாட்ரீசியாவைக் கரம் பற்றுகிறான். அவளது கம்பெனியிலே வேலைக்கும் சேருகிறான்.
இதற்கிடையில் ரொடால்ஃபோ மரணமடைய,குச்ஸி் நிர்வாகப் பொறுப்பை மொரீசியா தம்பதியினர் ஏற்கின்றனர்.ஆனால் 14 பில்லியன் இத்தாலிய லயர் (Lire) எஸ்டேட் வரி செலுத்தினால் மட்டுமே நிறுவனத்தை உரிமை கோரவியலும் என்ற நிலையில் தம்பதியினர் அமெரிக்கா செல்கின்றனர்.
மொரீசியாவை, குச்ஸி நிறுவனத்தில் நியமனம் செய்கிறார் ஆல்டோ குச்ஸி.குச்ஸி நிறுவன தயாரிப்பு போன்று,போலியாகத் தயாரிக்கப்பட்ட பிராண்ட்களால் வியாபாரம் சரிகிறது. இதைக் காரணமாக்கி ஆல்டோ குச்ஸி மற்றும் அவரது மகன் பாவ்லோவை குச்ஸி குழுமத்திலிருந்து வெளியேற்ற சதி செய்கிறாள் பாட்ரீசியா.ஆனால் மொரீசியா இதனை ஏற்க மறுக்கிறான்.ஆனால் அவளது சதி வெற்றி பெறுகிறது.
வரி ஏய்ப்புக்காக ஆல்டோ சிறைத்தண்டனை பெறுகிறார்.பாவ்லோ காப்பிரைட் விவகாரத்தால் அவனது வணிகநடவடிக்கை முடக்கப்படுகிறது.மொரீசியாவின் வீடும் ரெய்டுக்கு உள்ளாகிறது. இதனால் மொரீசியா கடுங்கோபம் கொள்கிறான். மன  உளைச்சலுக்கு உள்ளாகிறான்.ரெய்டிலிருந்து தப்பித்தும், மனைவி, மகளை விட்டுவிட்டும், சுவிட்சர்லாந்துக்கு  சென்றுவிடுகிறான்.அங்கு தன் முன்னாள் காதலியிடம் சேருகிறான்.நிம்மதி பெறுகிறான்.
இந்நிலையில், நிதிநெருக்கடியில் சிக்கிய குச்ஸி நிறுவனத்துக்கு முதலீட்டாளர் தேவை என்ற நிலையில், இராக்கைத் தலைமையகமாகக் கொண்ட “இன்வெஸ்ட்கார்ப்” நிறுவனத்துடன் மொரீசியா மற்றும் டொமினிகோவால் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
புதிய முதலீட்டாளர், குச்ஸி குழுமத்தில் உள்ள ஆல்டோ மற்றும் பாவ்லோவின் ஐம்பது சதவீத பங்குகளைத் தங்களுக்கு வழங்கக் கட்டாயப்படுத்துகிறார்கள்.அதற்கு மொரீசியாவும் ஆதரவு அளிக்கிறான்.அவர்களும் வேறுவழியின்றி தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து வேதனையுடன் பங்குகளை வழங்கிவிட்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்.
இதன்பின் தன் இரண்டாவது காதலியுடன் இத்தாலியிலேயே மொரீசியா தங்குகிறான். பாட்ரீசியாவுடனான மணமுறிவுக்கு முனைகிறான். ஆனால் பாட்ரீசியா மறுக்கிறாள். அவளது நெருங்கிய தோழி பினாவின் சதி ஆலோசனைப்படி மொரீசியாவைக் கொல்லக் கூலிப்படையை ஏவுகிறாள்.குச்ஸி குழுமமும் புதியநிர்வாகத்தின் கீழ் பாய்ச்சல்வேகத்தில் முன்னேறுகிறது.
நிர்வாகக் குழுக்கூட்டத்தில் மொரீசியாவை குச்ஸி நிறுவனத்திலிருந்து வெளியேற்ற  புதிய முதலீட்டாளர் முயல்கிறார்.இதற்கு குச்ஸியின் முன்னாள் மேலாளர் டொமினிகோ ஆதரவளிக்கிறார்.இவனது நம்பிக்கைத் துரோகத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மொரீசியா கூட்டத்தைவிட்டு வெளியேறுகிறான். ஆல்டோகுச்ஸி மற்றும் பாவ்லோ ஆகியோர்களைப்போலத் தானும் புதிய முதலீட்டாளரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறான்.
வெளியேறிய மொரீசியா சற்றே இளைப்பாற சிகரெட் பிடிக்கிறான். நடந்ததையெல்லாம் மறக்க சைக்கிள்சவாரி செய்கிறான். கையை ஹேண்டில் பாரிலிருந்து எடுத்து ஜாலியாக ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறான்.திடீரென்று,இரண்டு சிசிலியன் கைக்கூலிகள் வீட்டு வாசலில் மொரீசியாவைச் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். 
இரண்டு வருட நீதிமன்ற  விசாரணைக்குப் பின்னர், பாட்ரீசியா, தோழி பினா மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவருக்கும் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. பாட்ரீசியா,சிறைக்கு செல்வதற்கு முன்பாக மொரீசியா வீட்டுக்குச் சென்று இரண்டாம் மனைவியிடம் மன்னிப்புக் கோருகிறாள். மொரீசியாவுடன் எடுத்த புகைப்படத்தின் மீது சொர்க்கத்தை பூமியில் வாழ்ந்து அனுபவித்தவர்கள் என்ற  பொருள்படும்படி”சொர்க்கம்(PARADISO)”என கண்ணீர்சிந்தியவாறு எழுதுகிற காட்சியுடன் படம் நிறைவடைகிறது.
படத்தில் பல காட்சிகள் நெகிழவைக்கக் கூடியதாக உள்ளது. பாட்ரீசியாவுக்கு தீர்ப்பு சொல்லுவதற்கு முன்பு நீதிபதி குற்றவாளிகளின் பெயரைச் சொல்லி அழைப்பது மரபு. அதன்படி திருமதி பாட்ரீசியா ரெஜினி என இருமுறை அழைப்பார். செவிசாய்க்கமாட்டார். மூன்றாவது முறை அழைக்கையில், அவள் இடைமறித்து,”திருமதி குச்ஸி”என நீதிபதியை அழைக்கச் சொல்வாள். மொரீசியா குச்ஸி மீது இவள் வைத்துள்ள அளவு கடந்த காதலை ஊருக்கு உரக்கச் சொல்வதுபோல் இக்காட்சி அமைந்துள்ளது. 
போலி பிராண்டுகள் குறித்த காட்சியில்,பாட்ரீசியா “Fake goods” என்பாள்.ஆனால் ஆல்டோவோ,”It’s  not a fake. It’s a goods of replicas “என்பார். மேலும் இப்பொருட்கள் ஏழைகளுக்கு பெருமிதத்தை அளிக்கும் என்றும் கூறுவார். பார்வையாளர்களை இந்த வசனங்கள் யோசிக்க வைக்கிறது.
மொரீசியா,பிரசித்தி பெற்ற ஃபேஷன் வடிவமைப்பாளர் வின்டூர் என்பவரிடம்  குச்ஸி வளர்ச்சி குறித்து ஒருமுறை விவாதிக்கையில், பிற ஃபேஷன்  நிறுவனங்களை ஒப்பீடு செய்வார். ரால்ப் லாரென் ஷோரூம்கள் சினிமா செட்களைப் போன்றதாகவும், வெர்சாஸி ஷோரூம்கள் ராக் இசைக் கச்சேரி போன்றும்,ஆனால் குச்ஸி ஷோரூம்கள் மட்டுமே வாடிகன் ஆப் பேஷன்  என வாடிக்கையாளர்களை உணரவைக்கிறது எனக் கூறி பெருமைக் கொள்வார். இந்த ஒப்பீடு ரசிக்கத்தக்கது. 
கார்ப்பரேட் உலகில் நம்பிக்கைத் துரோகம் என்பது வியாபார தந்திரம்.
*நிறுவனத்தில் கோலோச்சும் லட்சியத்துக்காக காதல் கணவனானாலும் தாக்கி அழி என்பதுதான் புதிய கார்ப்பரேட் கீதை.இதன் குறியீடாகவே பாட்ரீசியா பாத்திரம் உள்ளது.
உலகமயத்தில், நிதி மூலதனம்  உறங்காது. நாடு விட்டு நாடு தாவும். கண்டம் விட்டு கண்டம் தாவும். இன்வெஸ்ட்கார்ப் என்ற நிதி முதலீட்டு அமைப்பு,ஃபேஷன் உலகில் முன்னணி நிறுவனமான டிஃபானி-ஐக் முதலில் கபளீகரம் செய்கிறது. பின்பு குச்ஸி குழுமத்தையும் கபளீகரம்  செய்கிறது. குச்ஸி குழுமத்தில்,குச்ஸி குடும்பத்தார்கள் யாருமே தற்போது நிர்வாகத்தில் இல்லை என்பதே சோகத்தின் உச்சம்.
டொமினிகோ கதாபாத்திரம் காசுக்கு விசுவாசம் மாறும் லும்பன் கலாச்சாரக் குறியீடு.
நூறு சதவீதம் லாபம் கிடைக்குமெனில்  மூலதனம் முதலாளியையே காவு கொள்ளும் என்பதை கலைநயத்தோடு சொல்லும் திரைப்படம் இது. 
2000-இல் வெளியாகி வெற்றி பெற்ற “கிளாடியேட்டர்”திரைப்படத்தை இயக்கிய “ரிட்லி ஸ்காடே”இப்பட இயக்குநர். இரு முறை சிறந்த நடிகருக்கான அகாடமி விருது பெற்றவர் “ஆடம் ட்ரைவர்”.அவரே இப்பட நாயகன்.பார்க்க வேண்டிய படம்.