வெளி மாநிலத்தவர் தமிழக வாக்காளராவது எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்!
அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காட்பாடி, ஆக. 2- லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழகத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டால், நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் துவக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமைத் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரைச் சந்தித்தது குறித்தும் இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா, என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரி யில்லை என்பதால் அரசியல் பண்பாட்டு டன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்” என்று பதிலளித்தார். பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்துக் கேட்டதற்கு, “அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்மூருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்கு வந்திருக்கிறார்கள், இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால், பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என நீக்கிவிட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் செய்ய முடியாது. ஆகையினால் இது நாட்பட்ட பிரச்சனை, இதைத் தலைவர்கள்தான் அணுக வேண்டும்” என்றார். “வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்க மும் இருக்கும்” எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.